தமிழக புதுமணத் தம்பதிக்கு பிரதமர் மோடி வாழ்த்துமடல்...!
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளுக்கு, பிரதமர் மோடி தனது கையெழுத்துடன் கூடிய திருமண வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் பிரதமர் மோடியின் தீவிர அபிமானி ஆவார். கடந்த மாதம் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் அடித்த ராஜசேகரன் அதனை மோடிக்கு அனுப்பி வைத்தார். மேலும் மணமக்களை தாங்கள் நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
ராஜசேகரன் கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகிய நிலையில் சனிக்கிழமை அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் பிரதமர் மோடி. ராஜசேகரனுக்கு பதில் கடிதம் அனுப்பிய மோடி, அதில் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி கூறியிருந்தார். தங்கள் மகள் திருமணத்திற்காக அழைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் வளமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்திப்பதாக கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் வாழ்த்துக்கடிதம் வரும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர் அனுப்பி வைத்த வாழ்த்துமடல் எங்கள் இரு குடும்பத்தாரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர் மணமக்கள் வீட்டினர்.
திருமணத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பிரதமர் அனுப்பிய கடிதத்தை உற்றார், உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பெரிய பதாகையாக மாற்றும் பணியில் இறங்கியிருக்கிறார் ராஜசேகரன்.