"எனது நண்பர் டொனால்ட் ட்ரம்ப்.. சீக்கிரம் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும்.." மோடி வாழ்த்து
டெல்லி: கொரோனாவிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைந்து குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம், விவாத நிகழ்ச்சியில், இந்தியாவை ட்ரம்ப் விமர்சனம் செய்த நிலையில், அவரை நண்பர் என்று அழைத்து ட்வீட் செய்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவர் மனைவி மெலானியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்தார்.
அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள, நரேந்திர மோடி, "எனது நண்பரும், அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவர் மனைவி, விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியம் பெறவும், வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
இந்தியா மீது விமர்சனம்
டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை, ஜோ பிடனுக்கு எதிரான விவாதத்தில் பங்கேற்று பேசியபோது, கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புகள் குறித்து இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா சரியான எண்ணிக்கையை கொடுக்கவில்லை. அமெரிக்காதான் சரியாக தகவல் வெளியிடுகிறது என்றார். ஒருபக்கம் ஹவுடி மோடி நிகழ்ச்சி மூலம், ட்ரம்ப்பிடம் அரசியல் ரீதியாகவும் நட்பு பாராட்டியவர் மோடி. ஆனால், இந்தியா பற்றி இப்படியான கருத்தை கூறியிருந்தார் ட்ரம்ப்.
இந்தியாவை சாடினார்
கொரோனா நம்பர்களை பற்றி பேசும்போது, சீனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ரஷ்யாவிலோ அல்லது இந்தியாவிலோ நடந்த மரணங்கள் உங்களுக்குத் தெரியாது... அவர்கள் நேரடியான எண்ணிக்கையைத் தரவில்லை என்று கூறியவர்தான் ட்ரம்ப்.
தனிமையில் ட்ரம்ப்
இந்த நிலையில்தான், அவரை மறுபடியும் நண்பர் என கூறியுள்ளார் மோடி. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப்புக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
டிரம்ப் நிலைமை
70 வயது தாண்டிய டிரம்புக்கு கொரோனா தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தினால் அது பெரிய ரிஸ்க்கான விஷயமாக மாறும். உடல் எடையும் அவருக்கு அதிகம் என்பது மற்றொரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள், மருத்துவ துறை வல்லுநர்கள்.