தீவிரமடையும் போராட்டம்.... விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிவிக்கும் மோடி
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டிலுள்ள ஒன்பது கோடி விவசாயிகளுடன் பிரமதர் மோடி வரும் டிசம்பர் 25ஆம் தேதி கலந்துரையாடவுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் முற்றுகை
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, தொடர்ந்து 28ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 30 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி கலந்துரையாடல்
இந்நிலையில், வரும் டிசம்பர் 25ஆம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஒன்பது கோடி விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடலில் ஈடுபடுவார் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் சட்டங்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமரின் கிஷான் திட்டித்தின் கீழ் அடுத்தகட்டமாக சுமார் 18,000 கோடி ரூபாய் நிதியுதவி திட்டங்களையும் அளிக்கவுள்ளார்.
100 செய்தியாளர் சந்திப்பு... 700 கூட்டங்கள்
வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் விளிக்கும் வகையில் நாடு முழுவதும் சுமார் 100 செய்தியாளர் சந்திப்புகளையும் 700 விளக்கக் கூட்டங்களையும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே பிரதமர் மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். இதில் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடவுள்ளார்.
விவசாயிகளுக்கு நரேந்திர தோமர் கடிதம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தங்கள் போராட்டங்களைக் கைவிட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்குத் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி, "நரேந்திர தோமர் விவசாய சகோதர சகோதரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். அனைவரும் இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். பாஜக தொண்டர்களும் இந்த கடிதத்தை விவசாயிகளுக்கு வழங்கிவருகின்றனர்.
பேச்சுவார்த்தை ரத்து
இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் உரிமை பறித்து காப்ரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி விவசாயிகள் போராடி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் மிக உறுதியாக உள்ளதால் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருந்த 6ஆம்கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
விரைவில் முடிவு
மத்திய அரசு விடுத்துள்ள புதிய பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பை ஏற்றுக்கொள்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி-ஹரியானா எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயச் சங்கத் தலைவர் குல்வந்த் சிங் சந்து தெரிவித்துள்ளார். இதில் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.