விவசாய சட்டங்கள்.. சீர்திருங்களை செய்யும் பிரதமரின் துணிச்சலான முடிவு.. வேளாண் அமைச்சர் பெருமிதம்
டெல்லி: பிரமதர் நரேந்திர மோடி வேளாண் துறையில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள சில துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் 50 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று தலைநகரை முற்றுகையிட்டு டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருப்பினும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதால் இதுவரை இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
அழுத்தத்திற்குப் பயந்த காங். அரசு
நாளை இரு தரப்பிற்கும் இடையே 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "ஒவ்வொரு முறையும் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் போதும் தடைகள் எழுவது வாடிக்கை தான். இந்த அழுத்தம் காரணமாகவே பழைய அரசால் எவ்வித சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முடியவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படாது
குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படுவதாகச் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்பட மாட்டாது என்பதை நாங்கள் பல முறை உறுதிப்படுத்தியுள்ளோம். சொல்லப்போனால் வரும் காலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் கொள்முதலை அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்றார்.
மத்திய அரசு vs விவசாயிகள்
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒன்பதாம்கட்ட பேச்சுவார்த்தையில் மூன்று சட்டங்களில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவையும் விவதாகிக்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்திருந்த விவசாயிகள், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது மட்டுமே ஒரே வழி என்றனர். இதற்கான பதிலாகவே நரேந்திர சிங் தோமரின் இன்றை பதில் பார்க்கப்படுகிறது. மத்திய அரசுக்கு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் எண்ணம் துளியும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
விவசாய சட்டங்கள் சரியானது
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் உழவர் சங்கங்களுக்கு இடையேயான விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னரே, இந்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 2013-14ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாய துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட தற்போது அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
10ஆம் கட்ட பேச்சுவார்த்தை
மேலும், பெரும்பாலான வேளாண் துறை வல்லுநர்கள் விவசாய சட்டங்களுக்கு ஆதரவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விவசாய சட்டங்களில் திருத்தங்களைச் செய்ய ஒப்புக் கொண்டிருந்தாலும், அவற்றை நீக்க மத்திய அரசு தயாராக இல்லை. இந்தச் சூழ்நிலையில் இரு தரப்பிற்கும் இடையே நாளை 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.