ஜேஎன்யு வன்முறையின்போது போலீஸாரிடம் ஆயுதமோ லத்தியோ இல்லை.. நற்சான்றிதழ் வழங்கிய போலீஸ் குழு
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு போலீஸாரின் அலட்சியம் காரணம் இல்லை என நற்சான்றிதழ் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு புகுந்தனர். அவர்கள் 36 மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் ஆகியோரை கட்டை மற்றும் இரும்பு ராடுகளால் கடுமையாக தாக்கினர்.
இதில் அவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வன்முறை சம்பவம் நடந்த போது போலீஸார் உள்ளே சென்று தடுக்காமல் ஏன் வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள்? இந்த சம்பவத்திற்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களை பிடிக்க உள்ளே புகுந்த போலீஸார் அங்கு நூலகத்தில் இருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். அவ்வாறிருக்கையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே மட்டும் போகாதது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
பெற்றோர்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பழனிச்சாமி
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க இணை ஆணையர் ஷாலினி சிங், தலைமையில் போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், 4 இன்ஸ்பெக்டர்கள், இரு உதவி ஆணையர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் பல்கலைக்கழக 100 மீட்டருக்குள்பட்ட இடத்தில் தர்னா போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர்.
அவர்களிடம் ஆயுதங்களோ லத்தியோ இல்லை. எனவே இந்த வன்முறைச் சம்பவத்தில் போலீஸார் மீது எந்த தவறும் இல்லை என காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு விசாரணை குழுவே நற்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.