பாரத மாதா, மோடி பற்றி அவதூறு பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது
டெல்லி: பாரத மாதா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பற்றி மோசமாக விமர்சனம் செய்து பேசி தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரை அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிரியார் கைது செய்யப்படாததை கண்டித்து பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், பாஜக போராட்டத்தை கைவிடாமல் நடத்தியுள்ளது.
பாரத மாதா, மோடி, திமுக பற்றி சர்ச்சை பேச்சு.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு
ஜார்ஜ் பொன்னையா விமர்சனம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் கடந்த மாதம் 18ஆம் தேதி சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அவரது வார்த்தைகள் இருந்தன.
திமுக மீது விமர்சனம்
நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி, பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் குற்றஞ்சாட்டினார் ஜார்ஜ் பொன்னையா. திமுக எம்எல்ஏக்கள் கோவில்களுக்கு சென்று பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்துவதை சுட்டிக்காட்டிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் சிறுபான்மையினர் போட்ட பிச்சை. எனவே இந்து கோயில்களுக்கு அவர்கள் சென்றாலும் ஓட்டு கிடைக்கப்போவது கிடையாது என்று தெரிவித்தார்.
அனுமதி பெறவில்லை
மிகக் கடுமையான வார்த்தைகளால் பலதரப்பட்டவர்களை இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்தார் ஜார்ஜ் பொன்னையா. அதேநேரம் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
7 பிரிவுகளில் வழக்கு
இதனிடையே, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை ஏற்று அருமனை காவல்துறையினர் ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா திடீரென தலைமறைவாகி விட்டார். முன் ஜாமீன் கிடைத்த பிறகுதான் அவர் வெளியே வர திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் சிக்னல்களை வைத்து, மதுரை அருகேயுள்ள கள்ளிக்குடியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. எனவே இன்று அதிகாலை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக போராட்டம்
பாதிரியார் கைது செய்யப்படவில்லை என்பதை கண்டித்து பாஜக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்து மகா சபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிவித்திருந்தன. பாதிரியார் கைது செய்யப்பட்ட நிலையிலும், போராட்டம் நடைபெற்றது.
மதப் பிரச்சினை
மத துவேஷம் ஏற்படுவதற்கு இவரது பேச்சு முக்கியமான காரணமாக அமைந்து விடும் என்பதுதான் காவல் துறையில் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டாகும். ஏற்கனவே மதரீதியாக கன்னியாகுமரி மாவட்டம் பதட்டமான பகுதியாக கடந்த காலங்களில் அறியப்பட்ட நிலையில் இதுபோன்ற பேச்சுக்கள் மீண்டும் மத பிரச்சினையை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள்.