மாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்ட்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
டெல்லி: புதிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் வன்முறை வெடித்த ஒரு நாள் கழித்து, இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமன் , "ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள்" மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் ஊடுருவுவது குறித்து காவல்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புது தில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மோதல் வெடித்தது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர், மேலும் பல்கலைக்கழகத்திற்குள்ளேயும அவர்கள் நுழைந்தனர், அங்கு போலீசார் மாணவர்களை நூலகத்திலிருந்து மற்றும் மசூதியில் இருந்து வெளியே இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கண்ணீர் புகை
டெல்லியின் மதுரா சாலை, நியூ பிரண்ட்ஸ் காலனி, ஜாமியா நகர் மற்றும் சாராய் ஜூலேனா ஆகிய இடங்களில் 1,000 போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல ஏறபட்டது. இதில் ஆறு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவங்களை அடுத்தே போலீசார் அடுத்து இந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.
அலிகார் பல்கலை
டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போலிஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். வன்முறையைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே ஜாமியா பல்லைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்களில் இதேபோன்ற போராட்டங்கள் வெடித்தது.
மாவோயிஸ்டுகள்
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள்" மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் ஊடுருவுவது குறித்து காவல்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் "நேற்று இரவு டெல்லி ஜாமியாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை; ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள் மாணவர் போராட்டங்களில் ஊடுருவுகிறர்கள். எனவே போலீசார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வயசு தான் காரணம்
மக்களின் உணர்வுகளை இப்படி தூண்டிவிடுவது எதிர்க்கட்சியின் விரக்தியையே காட்டுகிறது. போராட்டங்கள் பல்கலைக்கழகங்களுக்குப் புதுசு இல்லை என்றாலும், மாணவர்கள் அவர்களின் வயதின் காரணமாக இதுபோன்ற கொள்கைகளின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்" என்றார்
சிலரது சுயலாபம்
இதனிடையே பிரதமர் மோடி டெல்லி மோதல் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். சிலர் சுயலாபத்துக்காக ஏற்படுத்தும் பிளவை அனுமதிக்க இயலாது என்று கூறியுள்ளார்.