பாஜக மீது திடீர் பாசம்.. சட் என கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்... தமிழக ஆட்டம் எப்போது?
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி மீதான திடீர் பாசத்தால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தாவி வருவது தொடர் நிகழ்வாகி வருவதால் எதிர்க்கட்சிகள் கடும் உளைச்சலுக்குள்ளாகி இருக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சி தமது வலதுசாரி சித்தாந்தத்தை எப்போதும் மறைத்தது கிடையாது. ஒருபக்கம் சித்தாந்தத்தை தீவிரமாக பேசினாலும் இன்னொரு பக்கம் ஆட்சி அதிகாரத்தை நோக்கிய அதன் பயணம் விஸ்வரூபமானது.
அனைத்து இடங்களிலும் சித்தாந்தம் பேசியே வென்றுவிட முடியும் என்கிற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாஜக. ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற என்ன வழிகிடைத்தாலும் அதைவிடுவதாக இல்லை என்பதுதான் அதன் தேர்தல் அரசியல் வெற்றியாக கொண்டாடப்படுகிறது.
பாஜகவின் வியூகம்
தேர்தலில் வெல்லத்தான் வியூகமே தவிர ஏகடியங்கள் பேசுவதற்கு அல்ல என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. பாஜகவின் இந்த காரியக் கண்தான் இப்போது தேசமெங்கும் மாநிலங்களில் காவி கொடி பட்டொளி வீசக் காரணம். ராஜ்யசபாவிலும் தாம் நினைத்ததை சாதிக்க முடிகிற தெம்புக்கும் இதுவே அடிப்படை.
தேர்தலு பின் சடுகுடு
குறிப்பாக 2019- லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின்னரான பாஜகவின் சடுகுடு ஆட்டத்தால் திக்கு தெரியாத காட்டில் விழிபிதுங்கிக் கிடக்கின்றன பெரும்பாலான அரசியல் கட்சிகள். தேர்தல் பிரசாரத்தின் போதே உங்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர் என பிரதமர் மோடியே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை எச்சரித்தார்.
மமதாவுக்கு அதிர்ச்சி
தேர்தல் முடிவுகள் வெளியானதுதான் தாமதம்.. திரிணாமுல் காங்கிரஸை வேட்டையாட தொடங்கியது பாஜக. எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் என கொத்து கொத்தாக பாஜக பக்கம் பாய்ந்து ஓடினர். அதுவரை மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்த்த மமதா பானர்ஜி சற்றே அடங்கியும் போனார்.
கர்நாடகா ஆட்சி அம்போ
கர்நாடகாவிலும் இன்னும் காட்டமான நிலை. எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டுத்தான் ஆட்சியை கைப்பற்ற வேண்டியதில்லை.. எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மையை குறைக்க எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தாலே போதும் என்கிற தந்திரத்தை கையில் எடுத்தது பாஜக. இதில் காங்கிரஸ், ஜேடிஎஸ் இரண்டு கட்சிகளுமே வசமாக சிக்கி ஆட்சியையே பறிகொடுத்தன.
அடுத்தடுத்த கட்சிகள்
ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை என்கிற குறையைப் போக்கும் நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சியின் 6 எம்.பிக்களில் 4 பேரை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டது பாஜக. தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வேட்டையை பாஜக நடத்தி வருகிறது. ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளத்தின் தலைவர்களை அள்ளிக் கொண்டிருக்கிறது பாஜக.
கட்சியையே காணோமே
இதன் உச்சமாகத்தான் இன்று சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியையே கபளீகரம் செய்துவிட்டது பாஜக. அக்கட்சிக்கு மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள். தற்போது மாஜி முதல்வர் பவன்குமார் சாம்லிங் தவிர அத்தனை பேரும் பாஜகவை நோக்கி ஓடிவிட்டனர். இன்று 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். அடுத்த 4 பேரும் எந்த நிமிடத்திலும் பாஜகவில் இணையலாம் என்கிற நிலைமைதான்.
தமிழ்நாடு எப்போது?
இதில் வியப்புக்குரிய விஷயமாக இருப்பது தாமரை மலரவே மலராது என்கிற சூழலில் இருக்கும் தமிழகத்தில் பாஜக இன்னும் ஆட்டத்தை ஆரம்பிக்காமல் இருப்பதுதான். அதிமுக, பாஜகவுக்கு ஆதரவான கட்சிதான்.. திமுகவும் பாஜகவை மறைமுகமாக ஒரு சில இடங்களில் ஆதரிக்கிறது.. தமிழகத்தில் எந்த கட்சியின் எத்தனை எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூண்டோடு பாஜக மீது பாசத்துடன் பாய்வார்கள் என தெரியாத நிலைதான். பாஜகவின் இப்புதிய வியூகத்தால் எதிர்க்கட்சிகள் அத்தனையும் கடும் உளைச்சலுக்குள்ளாகி இருக்கின்றன என்பதுமட்டும் நிதர்சனம்.