தெறிக்கவிடும் டி.கே.சிவகுமார்.. அமலாக்கத்துறை பிடியில் இருந்தபடி, வெளியான வீடியோ
Recommended Video
டெல்லி: அமலாக்கத்துறையின் பிடியில் இருந்தபடியே, சுவரில் சாய்ந்து இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரக்க வைத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு எதிரான கைது படலத்தின் ஒரு அங்கமாக கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு அடுத்த சில நாட்களிலேயே கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள மற்றொரு பெரிய தலைவர் டி.கே.சிவகுமார்.
பாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா
கைது
நேற்று முன்தினம் இரவு அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள், திடீரென கைது செய்தனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி, நேற்று கர்நாடக பந்த்துக்கு அழைப்புவிடுத்திருந்தது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், மேலும் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறு, அமலாக்கத்துறை கோரிக்கைவிடுத்தது. ஆனால் சிவகுமார் தரப்பில் காவலில் வைத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
10 நாள் காவல்
இருப்பினும் சிவகுமாருக்கு 10 நாட்கள் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவு வெளியான சில நிமிடங்களில் டி.கே.சிவகுமாரின் ட்விட்டர் ஹேண்டிலில் ஒரு வீடியோ வெளியானது. அதில் சாட்சாத் சிவகுமார்தான் பேசியுள்ளார். காவலில் உள்ள சிவகுமார் பேசியதை பார்த்து, பரபரப்பில் உறைந்துள்ளனர் அமலாக்கத்துறையினர்.
|
பழிவாங்கல்
ஒரு சேரில் அமர்ந்துள்ள டி.கே.சிவகுமார், சுவரில் சாய்ந்தபடி ஆங்கிலத்தில், இப்படி கூறுகிறார், "Political vendetta has become stronger than the law in this country." அதாவது, நாட்டின் சட்டத்தைவிட, அரசியல் பழிவாங்கல் அதிக வலிமையானது என்று கூறியுள்ளார். விசாரணைக்கு சிவகுமார் ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறையினர் வாதிட்டபோது, இந்த குற்றச்சாட்டுக்கும், ஒத்துழைப்பு பிரச்சினைக்கும் தொடர்பே இல்லை என சிவகுமார் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை.
அடுத்தடுத்து அதிரடி
ஏற்கனவே அமலாக்கத்துறையினர் கைது செய்த சில நிமிடங்களில், கடைசியாக பாஜக நண்பர்கள் என்னை கைது செய்வதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என ட்வீட் போட்டு அதிர வைத்தவர் சிவகுமார். இப்போது காவலில் இருக்கும்போதே வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.