ஃபனி.. சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவு, 11 மாவட்டங்களில் தேர்தல் விதிமுறை தளர்வு! ஒடிசாவில் அலர்ட்
டெல்லி: ஃபனி புயல் ஒடிசாவில் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள சூழ்நிலையில், அங்கு11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்க வேண்டும் என்றபோதிலும், புயல் மீட்பு பணிகளுக்கு அதனால் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபனிப் புயல், மே 3ம் தேதி, ஒடிசாவில் கரையை கடக்க உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 205 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயலால் 5 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பாத்ரக், பாலசோர், மேயுர்பஞ்ச், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டக் மற்றும் ஜெய்பூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தளர்வு அளிப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உயர் உச்சக் கட்ட தீவிர புயலாக மாறியது ஃபனி.. அடுத்த புயல் எப்போது?
கோவில் நகரமான பூரியில் இருந்து, சுற்றுலா பயணிகள் நாளை மாலைக்குள் வெளியேற வேண்டும் என்று, அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தியாவசியமற்ற பணிகளுக்காக யாரும் மேற்கண்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒடிசா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் ராணுவத்தின் முப்படைகளும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 41 குழுக்கள், இம்மூன்று மாநிலங்களிலும் தயார் நிலையில் உள்ளன. அதிகப்படியாக ஒடிசாவில் 28 குழுக்கள் களமிறங்கியுள்ளன.
நாளை முதலே, ஒடிசாவிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.