அப்படின்னா.. பாகிஸ்தான் தொழிற்சாலைகளை தடை செய்ய சொல்றீங்களா.. உபி அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி
காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது
டெல்லி: டெல்லி காற்று மாசுக்கு, பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்று இன்று சுப்ரீம்கோர்ட்டில் உபி அரசு தெரிவித்துள்ளது.. இதையடுத்து, தலைமை நீதிபதி என்வி ரமணா, "நீங்கள் சொல்றதை பார்த்தால், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் காற்றில் மாசு படிதல் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் அங்கு மிகவும் மோசம் அடைந்துள்ளது.
சூப்பர் சான்ஸ்.. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம்.. தமிழக அரசு அரசாணை..!
வேளாண் அறுவடைக்கு பிறகு, டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
நீதிபதிகள்
காற்று மாசு குறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. நேற்றுகூட விசாரணை நடந்தது.. அப்போது, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது மாநில மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்ததும், அது தொடர்பான விசாரணையும் மிகப்பெரும் முக்கியத்துவத்தை நேற்றைய தினம் பெற்றது.
நடவடிக்கை
சுப்ரீம்கோர்ட் எழுப்பிய பல்வேறு கேள்விகளின் சுருக்கம்தான் இவை: காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லையே.. காற்று மாசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தற்போதைய நிலை என்ன? காற்றின் தரம் குறைவதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தீர்களா? எத்தனை விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன? அரசு நடவடிக்கை எடுத்ததா?
தீர்வுகள்
மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? அரசிடம் இருந்து எங்களுக்கு தரவுகள் எதுவும் தேவையில்லை, அதற்கு பதில் தீர்வுகள்தான் வேண்டும்.. பெரியவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், 3, 4 வயது குழந்தைகள் ஸ்கூலுக்கு செல்வதை பார்க்க முடிகிறது.. காற்று மாசு அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை மட்டும் திறந்தது ஏன்? எங்களை உத்தரவுகள் பிறப்பிக்க வைக்க வேண்டாம், எல்லாவற்றையும் நாங்கள் உங்களுக்கு சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா? காற்று மாசை கட்டுப்படுத்த 24 மணி நேரத்திற்குள் அரசு உரிய திட்டத்தை உருவாக்கவில்லை என்றால் சுப்ரீம்கோர்ட் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
5 பேர் கொண்ட குழு
இந்நிலையில், 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டிருந்ததையடுத்து, டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் இன்று தாக்கல் செய்துள்ளது. இது தவிர 17 பறக்கும் படைகள் கொண்ட கண்காணிப்பு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது... கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக பறக்கும் படைகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம்
முன்னதாக, இதுகுறித்த விசாரணையில், தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது குறித்த விவாதமும் நடைபெற்றது... அப்போது உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர் "தொழிற்சாலைகளை மூடுவது சர்க்கரை ஆலைகளை பாதிக்கும்.. பாகிஸ்தானிலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு கீழ்நோக்கி வரும் காற்றில் மாசு அடித்து கொண்டு வரப்படுகிறது.. டெல்லி, என்சிஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம்... காற்று மாசுக்கும் உபி மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார். அதை கேட்ட தலைமை நீதிபதி என்வி ரமணா, "அப்படின்னா, பாகிஸ்தானில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று என்கிறீர்களா? என்று கிண்டல் தொனியில் கேட்டார். "உங்கள் குறைகளை டேஹ் ஆணையத்திடம் தெரிவியுங்கள், அவர்கள் தீர்வு வழங்குவார்கள்" என்றும் ரமணா மேலும் தெரிவித்தார்.
பள்ளிகள்
தொடர்ந்து பேசும்போது, "டெல்லியில் பள்ளிகள் மூடும் விவகாரத்தில், சில ஊடகங்கள் எங்களை வில்லனாக சித்தரிக்கிறது.. ஸ்கூல்களை நாங்கள் மூட விரும்புவதுபோல் சில ஊடகங்கள் எங்களை வில்லன்களாக காட்ட முயற்சிக்கின்றன... நீங்கள்தானே (டெல்லி அரசு) பள்ளிகளை மூடுகிறோம், வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்துகிறோம் என்று சொன்னீர்கள்? ஆனால், இன்னைக்கு செய்தித்தாள்களில் நாங்கள் உத்தரவிட்டதுபோல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று காட்டமாக தெரிவித்தார்.
வில்லன்களா?
இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையில், டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று ஆஸ்பத்திரிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது... அத்துடன் இந்த வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கும் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.. இதனிடையே, டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் சொல்லும்போது, "காற்றின் தரம் அதிகரிக்கும் என்ற கணிப்பில் பள்ளிகளை மீண்டும் திறந்தோம். ஆனால், இப்போது காற்றின் தரம் மிகவும் மோசமாகி விட்டது. எனவே, மறு உத்தரவு வரும்வரை அனைத்து பள்ளிகளும் 3-ம் தேதி முதல் மூடப்படுகின்றன" என்று தெரிவித்தார்.