ரேசனில் நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள்.. மோடியின் அறிவிப்பு ஏழைகளுக்கு பயன்தருமா?
டெல்லி: ரேசன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கும் பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏழைகளுக்கு பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்கிற பிரதமர் மோடியின் அறிவிப்பு நிச்சயம் வரவேற்கத்தக்கது. இந்திய உணவு கழகத்தில் 10 கோடி டன்னுக்கும் அதிகமாக உணவு தானியங்கள் நிரம்பி வழிகின்றன.
கோவையில் ஒரே பகுதியில் அதிர்ச்சி அளிக்கும் கொரோனா தொற்று பரவல்.. கிருமி நாசினி தெளிப்பு!!
என்ன சிக்கல்?
இதனால்தான் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் 11 மாநில முதல்வர்கள், ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை 6 மாத காலத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தினர். ஆனால் இந்த நவம்பர் வரையிலான இலவச உணவு தானியங்கள் என்பது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (NFSA) கீழான ரேசன் கார்டுகளுக்குத்தான் பொருந்தும் என்பதுதான் சிக்கல். இதனால் பிரதமர் மோடி அறிவித்த திட்டம் ஏழைகளின் பசியை போக்கிவிடுமா? என்பதும் கேள்விக்குறி.
பல கோடி பெயர் இல்லை
ஏனெனில் NFSA ரேசன் கார்டுகளை பதிவு செய்கிற போதே 10 கோடிக்கும் அதிகமான பெயர் பல்வேறு காரணங்களால் சேர்க்கப்படவில்லை. பயனாளிகளை தேர்வு செய்கிற முறையும் பல்வேறு சிக்கல்களையும் பிழைகளையும் கொண்டதாகவும் இருந்தது. அதுவும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற கெடுபிடியால் பல கோடி பேர் பயனடையவே முடியாமல் போனது.
பட்டினி சாவுகள்
இந்த நடவடிக்கையால் தலித்துகள், பூர்வகுடிமக்கள், இஸ்லாமியர்கள் என பல்வேறு பிரிவு மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த பின்னணியில் கொரோனாவை முன்வைத்து திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் லாக்டவுனால் மார்ச் மாதம் மட்டும் 200 பேர் பட்டினியாலும் நிதிநெருக்கடியாலும் விரக்தியாலும் மாண்டுபோயினர் என்கிறது புள்ளி விவரங்கள். இதில் 11 வயதான குழந்தை ராகேஷ் முஷாகரின் குடும்பத்துக்கு ரேசன் கார்டு எதுவும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இரட்டை சலுகை
தமிழகம், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்கள், ரேசன் நடைமுறையை தங்களது மாநில நிதியில் செயல்படுத்தி வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரேசன் பொருட்களை இலவசமாக வழங்குவோம் எனவும் அறிவித்திருக்கிறார். ஆனால் பிரதமர் மோடி அறிவித்திருக்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் NFSA ரேசன் கார்டு இல்லாதவர்கள் மாநில அரசு, மத்திய அரசு வழங்கும் இரட்டை சலுகையை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மேலும் இடம்பெயர் தொழிலாளர்களும் மத்திய அரசு அறிவித்திருக்கும் கூடுதல் உணவு தானியங்களைப் பெற முடியுமா என்பதும் தெரியவில்லை. லாக்டவுன் அமலுக்கு வந்து 50 நாட்கள் கடந்த பின்னர் திடீரென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2 மாதங்களுக்கு ரேசன் கார்டுகள் எதுவும் இல்லாமல் உணவு தானியங்களைப் பெறலாம் என அறிவித்தார். ஆனால் இது நடைமுறையில் பல குழப்பங்களை உருவாக்கி இருந்தது.
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்கிற திட்டம் அர்த்தமே இல்லாததாகிவிட்டது. மேலும் கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், கோவா, ஹரியானா மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஜூலை 1-ந் தேதி கணக்குப்படி 14 மாநிலங்களில் மொத்தமே 490 ரேசன் கார்டுகள்தான் பிற மாநிலங்களிலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறதாம்.
வங்கி கணக்கில் பணம்
20 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி நீட்டிப்பு செய்யவில்லை. இதனால் 3 மாதங்களாக குறைந்தபட்சம் ரூ500 பெற்று வந்த குடும்பங்களுக்கு இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஏற்கனவே ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ7,500 வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் 3.2 கோடி ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் ரூ1,000 வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த பென்சன் திட்டத்தின் கீழ் 80% முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recommended Video
200 நாள் வேலைகள்
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ40,000 கோடி ஒதுக்கி இருப்பதால நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். தற்போது 100 நாள் திட்ட வேலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு 200 நாட்களுக்கான வேலைகள் வழங்கப்படவும் வேண்டும். ஆகையால் அனைத்து வகையான ரேசன் திட்டங்கள், நிதி உதவி திட்டங்கள் ஆகியவற்றை நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒழுங்கமைத்து விரிவுபடுத்த வேண்டியதுதான் முதன்மையான பணியாகும். இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.