தொல்லியல் பட்டயப்படிப்பு தகுதி.. செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு முதலிடம்.. எதிர்ப்பால் மாற்றம்
டெல்லி: தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து திருத்தம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டதிற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய தொல்லியல்துறை சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
கல்வி தகுதி
இந்த படிப்பிற்கு இந்திய வரலாறு, தொல்லியல் துறை, மானுடவியல், தொல்லியல் மொழிகளான சமஸ்கிருதம், பாலி, அரபு மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மொத்தம் உள்ள 15 இடங்களுக்கு நவம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
ஹைகோர்டில் வழக்கு
ஆனால் இந்த படிப்பிற்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.
தமிழையும் சேர்க்க கோரிக்கை
இதன்படி மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் படிப்புகளுக்கான அறிவிப்ப ரத்து செய்யவும், தமிழையும் இணைத்து முறையாக புதிய அறிவிப்பு வெளியிடக்கோரியும், அதுவரை சேர்க்கை நடைமுறையை நிறுத்தி வைக்கக் கோரியும் வழக்கும் தொடரப்பட்டது.இதை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், இன்று மனுவதாக தாக்கல் செய்தால் நாளையே (இன்று) விசாரிக்கப்படும் என்றார்கள்.
தமிழுக்கு முதலிடம்
இந்த சூழலில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து திருத்தம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு இந்த பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபி அல்லது பார்ஸி ஆகிய மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.