70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி
டெல்லி: காஷ்மீரில் இன்று நண்பகல் 12 மணிக்கு பிறகு போஸ்ட்பெய்ட் மொபைல் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதிலும், 40 லட்சம் போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகளில் ரிங் ஓசை கேட்கத் தொடங்கியுள்ளது.
மொபைல் சேவைகளை மீண்டும் தொடங்குவது காஷ்மீரின் நிலைமையை சீராக்க உதவும் என்று மாநில நிர்வாகம் கருதுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பதற்றம் இதன் மூலம் தணியும் என எதிர்பார்க்கலாம்.
ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசகர் ஃபாரூக் கான் அளித்த பேட்டியில், மொபைல் போன்கள் மீதான தடை விலக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருவார்கள் என்று நம்புகிறோம். ஜம்மு-காஷ்மீரில் அடிப்படைவாதத்திற்கு இடமில்லை.
ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல் நடந்துள்ளது. கையெறி குண்டு வீசுவது மாநிலத்தின் முன்னேற்ற நிலைமையை பாதிக்காது. ஜம்மு-காஷ்மீரில் நிலைமையை மோசமாக்க அண்டை நாடு முயன்றது, ஆனால் நாம் அதற்கான பதிலை அளித்துவருகிறோம் என்றார்.
ஆகஸ்ட் 4ல், அதாவது காஷ்மீருக்கு 370 வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு, ஒரு நாள் முன்பு, காஷ்மீரில் லேண்ட்லைன் தொலைபேசி மற்றும் மொபைல் போன்கள் மற்றும் இணைய சேவைகளை அரசு, தடுத்து நிறுத்தியது.
சில நாட்கள் முன்பாக, லேண்ட்லைன் சேவைகள் தொடங்கப்பட்டன. இப்போது போஸ்ட் பெய்ட் மொபைல் சேவைகள் மதியம் 12 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளன. செல்போன்களில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பேசி காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகிறார்கள்.