நாளை மறுநாள் முதல் காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை.. போஸ்ட்பெயிட் பயனாளர்களுக்கு மட்டும்
டெல்லி: காஷ்மீரில் போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பு சந்தாதாரர்கள், வரும், திங்கள்கிழமை முதல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அவர்களுக்கான தொலைதொடர்பு கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது.
மொபைல் தொலைபேசி இணைப்புகள் எந்த சேவை வழங்குநராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் போன் இணைப்புகளும் அக்டோபர் 14 மதியம் முதல் மீண்டும் தொடங்கும். காஷ்மீரின் அனைத்து 10 மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும், என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதை தடுக்க, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த மாதம், அரசு, லேண்ட்லைன் இணைப்புகளை மறுபடியும் இயங்க அனுமதித்தது. இருப்பினும், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவைகளுக்கு அதுவும் வீடுகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டது.
அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்தன. கடந்த மாதம் பெல்ஜியத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "காஷ்மீர் முழுவதையும் பாதிக்காமல் போராட்டம் நடத்துவோருக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மட்டும் நிறுத்த முடியாது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நான் எவ்வாறு துண்டிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்தது முதல், அங்கு தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.