நீட் தேர்வை ஒத்திப்போடுங்கள்.. அல்லது மாணவர்கள் தற்கொலைக்கு வழி வகுக்கும்.. மோடிக்கு சு.சாமி கடிதம்
டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தீபாவளிவரை ஒத்திவைக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்தை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
ஜேஇஇ மெயின் தேர்வுகள், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என்றும், மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வான நீட் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக, தற்போது தேர்வுகளை நடத்துவதை ஒத்திப் போட வேண்டும் என்று 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
ஆனால், கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தேர்வுகளை தள்ளிப்போட உத்தரவிட முடியாது என்று கூறி மனுக்களை டிஸ்மிஸ் செய்தது.
இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சுப்பிரமணியன் சுவாமி ஒரு 'அவசர' கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இப்போது தேர்வுகளில் நடத்தினால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல இளம் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும் என்பது எனது எண்ணம்.
உதாரணத்திற்கு, மும்பை நகரத்தை எடுத்துக்கொள்ளலாம். அங்கு பொது போக்குவரத்து கிடையாது. பிற பகுதிகளிலிருந்து தேர்வு எழுதுவதற்காக எப்படி மாணவர்களால் வர முடியும். தேர்வுகள் நடைபெறுமா அல்லது இல்லையா என்பதில் நிச்சயமற்ற நிலைமை இருப்பதால் மாணவர்கள் முழு அளவில் தயாராகவில்லை.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : நேரலையில் தரிசனம் பண்ணுங்க
தேர்வுகளை இரண்டு வாரங்கள் தள்ளி வைப்பதா, இரண்டு மாதங்கள் தள்ளி வைப்பதா என்பதெல்லாம் அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு கல்வித்துறைக்கு நீங்கள் தலையிட்டு அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய கல்வி அமைச்சரிடம் நான் தொடர்பு கொண்டு நீட் மற்றும் பிற தேர்வுகள் பற்றி பேசி உள்ளேன். தீபாவளிக்குப் பிறகு தேர்வுகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசுக்கு ஒரு தடையாக மாறவில்லை. ஏனெனில் தேர்வு தேதியை எடுக்கும் அதிகாரத்தை அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.