நீதித்துறை அதிகார வரம்பில் கைவைக்க முடிவு லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் ஏற்படுத்திய புதிய சர்ச்சை
டெல்லி: லட்சத்தீவு நீதித்துறை அதிகார வரம்பு எல்லையை கேரளாவில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற பிரஃபுல் கோடா படேல் பரிந்துரை செய்துள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு நமது அண்டை மாநிலமான கேரளாவின் கடலோரத்தின் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ளது.
லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை அழகு நிரம்பி வழியும் லட்சத்தீவில் சுற்றுலாத் துறை, மீன்பிடி பிரதானமான தொழிலாக உள்ளது. லட்சத்தீவில் நிர்வாகியாக நியமிப்பட்டுள்ள பிரஃபுல் கோடா படேல் அங்குள்ள மக்களுக்கு எதிராக பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, தனக்கு சாதகமான அரசு ஊழியர்களை நியமித்து வருவது, சாலைகளை விரிவுபடுத்துவதற்கு மீனவர்களின் குடிசையை அகற்ற உத்தரவிடுதல் என பிரஃபுல் கோடா படேல் தன்னிச்சையாக எடுத்து வரும் நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்தீவின் அமைதியை சீர்குலைக்கிறார் பிரஃபுல் படேல்... மகிளா காங்கிரஸ் நிர்வாகி குற்றச்சாட்டு..!
பிரஃபுல் கோடா படேலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கேரள மக்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். லட்சத்தீவு நீதித்துறை அதிகார வரம்பு கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் லட்சத்தீவு நீதித்துறை அதிகார வரம்பு எல்லையை கேரளாவில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற பிரஃபுல் கோடா படேல் பரிந்துரை செய்துள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது லட்சத்தீவு தொடர்பான எந்த ஒரு வழக்கையும் கேரள உயர்நீதிமன்றம் தான் விசாரித்து வருகிறது. பிரஃபுல் கோடா படேலுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. இதனை மனதில் வைத்தே லட்சத்தீவு நீதித்துறை அதிகார வரம்பு எல்லையை கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற பிரஃபுல் கோடா படேல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.