விமான போக்குவரத்து முறைகேடு.. பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் தீவிர விசாரணை
டெல்லி: விமான போக்குவரத்து முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் விமானத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரபுல் பட்டேலிடம், அமலாக்கத் துறையினர், இன்று சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, விமான போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தவர் பிரபுல் பட்டேல். அப்போது பல்வேறு வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு, லாபகரமான வழித்தடங்களை ஒதுக்கியதாகவும், அதிக பயணிகள் வரக்கூடிய நேரங்களை ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழலில் இடைத்தரகராக செயல்பட்டதாக தீபக் தல்வார் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் பிரபுல் பட்டேலுக்கு, தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்பேரில் அமலாக்கத் துறை சார்பில், விசாரணைக்கு ஆஜராகும்படி பிரபுல் பட்டேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடந்த 6தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தனிப்பட்ட காரணங்களால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பிரபுல் பட்டேல் இன்று காலை விசாரணைக்காக நாள் இரவு வரை தொடர்ச்சியாக 8 மணி நேரம் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் இதையடுத்து விசாரணை நாளையும் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவரிடம் அறிவுறுத்தி அனுப்பி உள்ளதாக வெளியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.