வதந்திகளை பரப்ப வேண்டாம்.. அவரின் மைக் வேலை செய்யவில்லை.. பிரக்யா கருத்துக்கு பாஜக விளக்கம்!
கோட்ஸேவை தேச பக்திமான் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்துக்கு மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: கோட்ஸேவை தேச பக்திமான் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்துக்கு மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று லோக்சபாவில் திமுக சார்பாக பேசிய எம்பி ஆ. ராசா, தலைவர்கள் பாதுகாப்பு தொடர்பான எஸ்பிஜி மசோதா பற்றி பேசும் போது நாம் கோட்ஸேவை நினைவு கூற வேண்டும். அவர் காந்தியை கொன்றதாக தானே ஒப்புக்கொண்டு இருக்கிறார். காந்தி மீது 37 வருடம் இருந் காழ்புணர்ச்சி காரணமாக அவரை கொன்றேன் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று ஆ. ராசா பேசினார்.
இதற்கு எதிராக உடனடியாக பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் குறுக்கிட்டார். அதில், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார். இதனால் அவையில் பேசிய சர்ச்சை உருவானது.
இந்த நிலையில் பிரக்யா தாக்கூரின் கருத்து குறித்து மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி விளக்கம் அளித்தார். அதில், பிரக்யா தாக்கூர் கோட்ஸேவை தேசபக்திமான் என்று சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. அவரின் மைக் அப்போது ஆன் செய்யப்படவில்லை. சுதந்திர போராட்ட வீரர் உத்தம் சிங் குறித்து பேசிய போதுதான் அவர் பதில் அளித்தார்.
இதற்கு பிரக்யா தாக்கூர் விளக்கம் அளித்தார். என்னிடம் தனிப்பட்ட வகையிலும் அவர் விளக்கம் அளித்தார். அவர் கோட்ஸே குறித்தோ, வேறு யார் குறித்தோ பேசவில்லை. அதற்கான ஆதாரம் இல்லை. இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புவது தவறு, என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.