லோக்சபா: முதல் நாள் கூட்டத்திலேயே சர்ச்சையை உருவாக்கிய சாத்வி பிரக்யாசிங் தாக்கூர்
டெல்லி: லோக்சபா முதல் நாள் கூட்டத்திலேயே சர்ச்சையை உருவாக்கிவிட்டார் போபால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யாசிங் தாக்கூர். இதனால் 2-வது முறையாக அவர் பதவி பிரமாணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கிய சாத்வி பிரக்யாசிங் தாக்கூரை போபால் லோக்சபா தொகுதியில் வேட்பாளராக பாஜக நிறுத்தியது. காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கை எதிர்த்து பிரக்யா சிங் போட்டியிட்டார்.
தேர்தல் களத்தில் பிரக்யாசிங் பேசியது அத்தனையுமே சர்ச்சையாகிப் போனது. தேர்தல் ஆணையமே பிரக்யாசிங்குக்கு வாய்ப்பூட்டு போட்டது. இருப்பினும் திக்விஜய்சிங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் பிரக்யாசிங்.
இதனைத் தொடர்ந்து இன்று 17-வது லோக்சபாவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட வெற்றி பெற்ற எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பிரக்யாசிங் பதவியேற்கும் போது தமது குருநாதர் பெயரையும் சேர்த்தே குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதையடுத்து ஆவணங்களைப் பார்த்து அனுமதிப்பதாக தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் கூறினார்.
அப்போது தந்தையின் பெயரை சேர்த்து கூறுமாறு லோக்சபா அதிகாரிகள், பிரக்யாசிங்கிடம் கூறினர். இதையும் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆட்சேபித்தனர். கடைசியாக 3-வது முறை பிரக்யாசிங் தாகூர் என குறிப்பிட்டு பதவியேற்றார் பிரக்யாசிங்.