பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை!
சர்ச்சைக்குரிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்று இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: சர்ச்சைக்குரிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்று இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்கூர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக போபால் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார்.
இவர் நிறைய சர்ச்சையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். நாங்கள் அதே இடத்தில் ராமர் கோவிலை கட்டுவோம், என்பது உட்பட பல சர்ச்சையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
புலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரிகமா? திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்
என்ன நியமனம்
இந்த நிலையில் தற்போது பிரக்யா தாக்கூர் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். மொத்தம் 21 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழு இன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருப்பார்.
அரசில் இடம் பிடித்தார்
இந்த குழுவில் எதிர்கட்சியை முக்கிய தலைவர்களாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் எம்பி பரூக் அப்துல்லா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர் இடம்பெற்றுள்ளார்.
என்ன குழு
இந்த குழு இந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை ஏற்படும் போது தேசிய பாதுகாப்பு அமைப்பு இவர்களிடம் ஆலோசனை செய்யும். இவர்கள் முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு துறையில் அடிக்கடி வழங்குவார்கள்.
வைரல்
இந்த நியமனம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குண்டு வெடிப்பு வழக்கில் சிறை சென்று, புகாரில் சிக்கி இருப்பவரை எப்படி பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் நியமிக்கலாம். பாதுகாப்பிற்கு எதிரான ஒரு நபரை எப்படி பாஜக கட்சி பாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் நியமிக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.