கோட்ஸே பற்றி பேசிய ஆ.ராசா.. தேச பக்திமானை பற்றி பேசாதீர்கள்.. கொதித்தெழுந்த பிரக்யா.. புது சர்ச்சை!
காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸேவை பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் தேச பக்திமான் என்று லோக்சபாவில் குறிப்பிட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி: காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸேவை பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் தேச பக்திமான் என்று லோக்சபாவில் குறிப்பிட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
இன்று லோக்சபாவில் எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. பிரதமருக்கு மற்றும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த மசோதாவில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. அதில் திமுக சார்பாக எம்பிக்கள் மிகவும் கடுமையாக தங்கள் வாதங்களை வைத்தனர்.
ஆ. ராசா
இன்று திமுக சார்பாக பேசிய எம்பி ஆ. ராசா, தலைவர்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த மசோதா பற்றி பேசும் போது நாம் கோட்ஸேவை நினைவு கூற வேண்டும். அவர் காந்தியை கொன்றதாக தானே ஒப்புக்கொண்டு இருக்கிறார். காந்தி மீது 37 வருடம் இருந் காழ்புணர்ச்சி காரணமாக அவரை கொன்றேன் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று ஆ. ராசா பேசினார்.
பிரக்யா தாக்கூர்
இதற்கு எதிராக உடனடியாக பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் குறுக்கிட்டார். அதில், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரிய சர்ச்சை உருவானது.
பாஜக பிரக்யா தாக்கூர்
இதன்பின் பேசிய பிரக்யா தாக்கூர், என்னை எல்லோரும் தீவிரவாதி என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை அப்படி சொல்பவர்கள்தான் தீவிரவாதிகளை விடுதலை செய்துள்ளனர். அவர்கள்தான் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
காங்கிரஸ்தான்
போபால் விஷவாயு தாக்குதலின் குற்றவாளி ஆன்ட்ரசனை தப்பவிட்டது காங்கிரஸ்தான். இதனால் மக்கள் 34 வருடம் கழித்தும் கஷ்டப்படுகிறார்கள். மக்கள் இன்னும் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஆனால் அவர்கள் என்னை போய் தீவிரவாதி என்று கூறுகிறார்கள் என்று பிரக்யா தாக்கூர் குறிப்பிட்டார்.
சர்ச்சை
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போதே பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கோட்ஸேவை தேச பக்தி மான் என்று குறிப்பிட்டார். அப்போதே இவருக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தற்போது மீண்டும் அவர் இதே கருத்தை, இந்த முறை லோக்சபாவில் குறிப்பிட்டு இருக்கிறார்.