27 கிலோ பிரக்யான்.. வெறும் 14 நாள் சோதனைக்காக இஸ்ரோ அனுப்பும் குட்டி ரோபோ.. என்ன காரணம்?
இன்று விண்ணில் பாயும் சந்திராயன் 2வில் பிரக்யான் என்று சிறிய ரோவர் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
டெல்லி: இன்று விண்ணில் பாயும் சந்திராயன் 2வில் பிரக்யான் என்று சிறிய ரோவர் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. நிலவில் செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி இது தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இன்று விண்வெளி அரங்கில் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவின் தென் துருவத்தை நோக்கி சந்திராயன் 2 தனது பயணத்தை இன்று மாலை சரியாக 2.54 மணிக்கு துவங்குகிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கி ''டிக் டிக்'' என்று அடித்துக் கொண்டு இருக்கிறது.
மூன்று விஷயங்கள்
இந்தியாதான் முதல்முறையாக நிலவின் தென் துருவ பகுதிக்கு ஆய்வு களம் ஒன்றை அனுப்புகிறது. சந்திராயன் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. அதன்படி ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று.
இறக்க உதவும்
இதில் ஆர்பிட்டார் சரியாக ஒரு வருடங்களுக்கு நிலவில் ஆராய்ச்சி செய்யும். நிலவை சுற்றிவந்தபடி அதை ஆர்பிட்டார் ஆராய்ச்சி செய்யும். மாறாக விக்ரம் மற்றும் பிரக்யான் இரண்டும் நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும். இதில் விக்ரம் என்பது லேண்டர் ஆகும். இதுதான் நிலவில் மெதுவாக களமிறங்கும். இதற்கு உள்ளே பிரக்யான் என்ற ரோவர் இருக்கும்.
விக்ரம் என்ன செய்யும்
விக்ரம் மிக மிக கவனமாக நிலவில் தரையிறங்கி ஒரே இடத்தில் இருந்து ஆராய்ச்சி செய்யும். பின் நேரடியாக பூமிக்கு இது தகவல்களை அனுப்பும். இந்த லேண்டரால் வேறு எங்கும் நகர்ந்து செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விக்ரம் உள்ளே இருக்கும் ரோவர் ரோபோவான பிரக்யான் 500 மீட்டர் வரை நகர்ந்து செல்ல கூடிய திறன் கொண்டது.
பிரக்யான்
பிரக்யான் என்பது ஊர்ந்து செல்ல கூடிய ரோவர் வகை ரோபோட் ஆகும். இது வெறும் 27 கிலோதான் கொண்டது. இதில் நிறைய ஆராய்ச்சி கருவிகள் இருக்கும். நிமிடத்திற்கு 1 செமீ தூரம் இது நகர கூடியது. மொத்தம் 14 நாட்கள் மட்டுமே நிலவில் இது ஆராய்ச்சி செய்யும். ஆம் வெறும் 14 நாட்களில் இது மொத்தமாக தனது ஆராய்ச்சிகளை முடித்துவிடும். அதன்பின் இதன் வாழ்நாள் முடிந்துவிடும்.
என்னவெல்லாம் செய்யும்
சந்திரயான் 2 திட்டத்தின் மெயின் ஹீரோ யார் என்றால் அது பிரக்யான்தான். பிரக்யான் செய்யும் ஆராய்ச்சி முடிவுகளை வைத்துதான் நிலவில் இந்தியா தனது ஆராய்ச்சிகளை தொடரும். சரியாக 14 நாட்களில் பிரக்யான் தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பணிகளையும் மொத்தமாக முடித்துவிட்டு செயலிழக்கும். அதாவது செப்டம்பர் 22ம் தேதிக்குள் நிலவு ஆராய்ச்சி குறித்த முடிவுகள் தெரிய வரும்.
யாருக்கு அனுப்பும்
இதை சுமந்து செல்லும் விக்ரம் லேண்டர் 1400 கிலோ எடை கொண்டது. பிரக்யான் தனது ஆராய்ச்சி சிக்னல்களை விக்ரமிற்கு அனுப்பும். அதன்பின் விக்ரம் பூமிக்கு முடிவுகளை அனுப்பும். விக்ரமின் ஆயுட்காலமும் 14 நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.