டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்த பிரகாஷ்ராஜ்.. லோக்சபா தேர்தலுக்கு வியூகம் வகுக்கிறாரா?
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார்.
நடிகர் பிரகாஷ்ராஜின் நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் வலதுசாரி அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவரது கோபம் வலது சாரிகள் பக்கம் வீரிட்டெழுந்துள்ளது. இதையடுத்து அவரது கருத்துகள் பொதுவாக வலது சாரிகளுக்கு எதிராகவே அமைந்துள்ளது.
இந்நிலையில் அவர் கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு தான் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி ஆதரவு தெரிவித்துள்ளார். அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Met delhi CM @ArvindKejriwal thanked him and @AamAadmiParty for the support in my political journey. Discussed and requested to share various ways to address issues which his team has commendably done.. #bengalurucentral #citizensvoice in parliament #justasking in parliament too pic.twitter.com/FJu4OirGWW
— Prakash Raj (@prakashraaj) January 10, 2019
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தருவதாக ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில் இன்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.
அப்போது தேர்தலில் ஜெயிப்பது குறித்த வியூகம் வகுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. சில மாதங்களுக்கு முன், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கண்டித்து டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் மேற்கொண்டு இருந்தபோது, அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.