பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா.. விழாவை புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி.. பரபரப்பு
டெல்லி: முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, பிரணாப் முகர்ஜிக்கு, நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான, பாரத ரத்னா, இன்று வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
பிரணாப் முகர்ஜி மட்டுமின்றி, மறைந்த, பாரதிய ஜன சங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் மற்றும் புகழ்பெற்ற பாடகர்-இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல மத்திய அமைச்சர்கள், அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரணாப் முகர்ஜி இந்த விருதைப் பெற்ற ஐந்தாவது ஜனாதிபதியாகும். காங்கிரசின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கும் விழாவில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரணாப் முகர்ஜி, 2012 முதல் 2017ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். 2014ல் முதல் முறையாக மோடி அரசு பதவிக்கு வந்த பிறகும், அவரே குடியரசு தலைவராக தொடர்ந்தார். பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகுதான், மத்திய அரசு, பாஜகவை சேர்ந்தவரான ராம்நாத் கோவிந்த்தை குடியரசு தலைவராக முன்மொழிந்தது.
கடந்த ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இதுவும் காங்கிரஸ் தலைமையை எரிச்சல்படுத்தியது. இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு, பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா என யாருமே பங்கேற்கவில்லை.