டெல்லி லோதி மயானத்தில்.. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் தகனம்.. அஞ்சலி!
டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். மூளை குழாயில் அடைப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இவருக்கு ஏற்பட்டது.
மூளை குழாயில் அடைப்பை நீக்கிய பின்பும் கூட, நுரையீரல் தொற்றை இவருக்கு சரி செய்ய முடியவில்லை. இதனால் இவர் உடல் நலிவடைந்து கொண்டே சென்றது. டெல்லியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் இவருக்கு 21 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் உடல் நேற்று இரவு டெல்லியில் 10 ராஜாஜி மார்க் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பிரணாப் முகர்ஜி உடலுக்கு மூத்த அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரணாப் முகர்ஜி உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் இவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய் உறங்கிவிட்டது.. பிரணாப் முகர்ஜி மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
பொது மக்களும் வரிசையாக வந்து இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.இதையடுத்து டெல்லியில் பிரணாப் முகர்ஜி உடல் எரியூட்டப்பட்டது. டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் எரியூட்டப்பட்டது.
பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி இறுதி சடங்கை செய்தார்.