அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு!
டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் தேர்தலை மிக சிறப்பாக நடத்தியிருக்கிறது என பாராட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளன. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முன் எப்போதும் இல்லாதவகையில் தேர்தல் ஆணையம் மீது அனைத்து எதிர்க்கட்சிகளுமே புகார் தெரிவித்துள்ளன.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது எதிர்க்கட்சிகள் புகார். தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி பிரதமர் உள்ளிட்டோர் பேசியபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் புகார்களை நிராகரித்தது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையர்களில் ஒருவரான லவசா கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று தலைமை தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்த உள்ளன.
நம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்
இதனிடையே டெல்லியில் நடைபெற்ற புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முதலாவது தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் வரை மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையர்களை நீங்கள் விமர்சிக்காதீர்கள்.. அவர்கள் சரியாகவே செயல்படுகின்றனர். ஜனநாயகம் என்பது வெற்றிகரமாக இயங்குகிறது எனில் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படுவதால் மட்டுமே சாத்தியம் என பேசியுள்ளார்.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் நிலையில் மாஜி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மட்டும் தேர்தல் ஆணையருக்கு ஆதரவாக பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.