பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது.. கவுரவித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான, பாரத ரத்னா, இன்று வழங்கப்பட்டது. இதேபோல, மறைந்த, பாரதிய ஜன சங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் மற்றும் புகழ்பெற்ற பாடகர்-இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கும் இந்த விருது இன்று வழங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், ஹசாரிகாவின் மகன் தேஜ் மற்றும் தேஷ்முகின் நெருங்கிய உறவினர் வீரேந்தர்ஜீத் சிங் ஆகியோரிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் 2010ம் ஆண்டு காலமாகிவிட்டார். பூபன் ஹசாரிகா 2011ம் ஆண்டு காலமானார்.
தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல மத்திய அமைச்சர்கள், அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
President Kovind presents Bharat Ratna to Shri Pranab Mukherjee, former President of India. A statesman and one of India’s most respected political leader, Shri Pranab Mukherjee served the nation in various capacities in his long political career spanning over five decades pic.twitter.com/41fqJlnBHS
— President of India (@rashtrapatibhvn) August 8, 2019
பாரத் ரத்னா விருது, நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனர் மதன் மோகன் மால்வியா ஆகியோருக்கு இந்த விருதை நரேந்திர மோடி அரசின் முந்தைய பதவிக் காலத்தில், 2015ம் ஆண்டு, வழங்கியது.
பிரணாப் முகர்ஜி இந்த விருதைப் பெற்ற ஐந்தாவது ஜனாதிபதியாகும். பிரணாப் முகர்ஜி, 2012 முதல் 2017ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். காங்கிரசின் மூத்த தலைவராக அறியப்படும், பிரணாப் முகர்ஜி (83), முன்னாள் ஜனாதிபதிகள் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் உசேன் மற்றும் வி வி கிரி ஆகியோர் போல, பாரத் ரத்னா பெற்ற முன்னாள் ஜனாதிபதிக்கான பட்டியலில் இணைந்துள்ளார்.