அப்பா உயிருடன் இருக்கிறார்.. தேவையற்ற வதந்திகள் வேண்டாம்.. பிரணாப் மகன் அபிஜித்
டெல்லி: எனது அப்பா உயிருடன்தான் இருக்கிறார். அவருடைய இதயத் துடிப்புகள் சீராக இருக்கின்றன. எனவே தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84), அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால் மூளையில் ரத்தம் கட்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் அவருக்கு திங்கள்கிழமை அன்று ஆர் ஆர் ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்
முன்னேற்றம்
இதையடுத்து அவர் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் அவரது உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
பிரார்த்தனை
இவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். பிரணாப்பின் மகளும் அனைவரும் பிரார்த்தனை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் இருந்து ட்விட்டரில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின.
சமூகவலைதளம்
இதையடுத்து பிரணாப் குறித்து அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கிறார். அவரது இதய துடிப்பு சீராக உள்ளது. ஆனால் பல முன்னணி செய்தி நிறுவனங்களே யூகத்தின் அடிப்படையிலும் போலி செய்தியாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
தொழிற்சாலை
இதன் மூலம் ஊடகங்கள் போலி செய்திகளின் தொழிற்சாலை என்பது தெளிவாகிறது என அபிஜித் தெரிவித்தார். பல செய்தி ஊடகங்களும் பிரணாப் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட்டு வருவது தவறு என காங்கிரஸ் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.