இனிதான் பிகே ரொம்ப பிஸி.. அடுத்தடுத்து மூவ்.. மோடிக்கு சிம்ம சொப்பனமாக மாறும் பிரசாந்த் கிஷோர்!
Recommended Video
டெல்லி: அரசியல் வித்தகர் பிரசாந்த் கிஷோரின் வேலை கெஜ்ரிவாலை வெற்றிபெற வைத்ததோடு முடிந்துவிடவில்லை. இனிதான், அவருக்கு நிஜமான ஆசிட் டெஸ்ட்கள் காத்திருக்கின்றன.
அரவிந்த் கெஜ்ரிவாலுடன், கடந்த டிசம்பர் மத்தியில்தான் கை கோர்த்தார் பிரசாந்த் கிஷோர். ஆனால், தனது வழக்கமான பாணியில் மளமளவென வேலை பார்த்து, கிட்டத்தட்ட ஆம் ஆத்மி க்ளீன் ஸ்வீப் செய்ய உறுதுணையாக இருந்துள்ளார் அவர்.
உற்சாகமாக கெஜ்ரிவாலுடன் நின்றபடி ஒரு போஸ் கொடுக்க அது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. ஆனால் இத்தோடு முடியவில்லை பிரசாந்த் கிஷோர் பணி. பாஜக எங்கெல்லாம் காலூன்ற தலைகீழாக பிரயத்தனம் செய்கிறதோ அந்த மாநிலங்களில் இனிதான் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அங்கெல்லாம் பாஜகவுக்கு எதிரே சிம்ம சொப்பனமாக நிற்கப்போகிறவர் இதே பிரசாந்த் கிஷோர்தான்.
பி.கே. வை கட்டி அணைத்த ஏ.கே.. பயங்கர குஷியில் ஆம் ஆத்மி.. கட்சி அலுவலகத்தில் வெற்றி குதூகலம்
பீகார் தேர்தல்
இந்த ஆண்டு பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவரை பிரசாந்த் கிஷோர் எந்த தேர்தலையும் தனிப்பட்ட முறையில் எடுத்து வன்மம் தீர்த்து இல்லை. கடமையை செய்வார். பலனை மக்கள் கொடுப்பார்கள். ஆனால் பீகார் அவருக்கு கவுரவப் பிரச்சினை. பொங்கலுக்கே பட்டாசு வெடிப்பவர், இப்போ தீபாவளியே வந்திருக்கு, மனிதன் சும்மா இருப்பாரா? முழு ஃபோக்கசும், பிரசாந்த் கிஷோருக்கு, அங்கேதான் இருக்கிறது.
கோபம்
இதற்கு காரணம் உள்ளது. ஜே.டி.யூ தலைவர் நிதீஷ்குமார் மீது அபிமானம் ஏற்பட்டு அந்த கட்சியில் சேர்ந்தார், பிரசாந்த் கிஷோர். ஆனால் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு, நிதீஷ் குமார் கட்சி ஆதரவு அளித்தலால் கடும் கோபமடைந்தார். இந்த மோதல் வெடித்து கடைசியில் கட்சியை விட்டே வெளியேறினார், பிரசாந்த் கிஷோர். அப்போது அவர் போட்ட ட்வீட், உள்குத்துடன் கூடியது.
|
ஆசீர்வாதம்
நன்றி நிதிஷ் குமார். நீங்கள் மீண்டும் முதல்வர் அரியணையை பிடிக்க எனது வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு ஒரு ட்வீட் போட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர். அதன் அர்த்தம், நீங்கள் எப்படி ஆட்சியை பிடித்துவிடுவீர்கள் என நான் பார்த்துவிடுகிறேன் என்பதுதான் என மொழி பெயர்த்தனர், அவருக்கு நெருக்கமானவர்கள். இதோ இந்த ஆண்டு பீகாருக்கு தேர்தல் நடக்கும், அடுத்த ஆண்டு, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 3 முக்கிய மாநிலங்களுக்கு அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளது.
பிரசாந்த் கிஷோர்
முன்னாள் ஜே.டி.யூ தலைவர் பவன் வர்மா, சமீபத்தில் கட்சியில் இருந்து நிதீஷால் வெளியேற்றப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அவர் இணைய வாய்ப்புள்ளதாம். வர்மா ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சிக் கொள்கைகளுக்கு பாராட்டை வெளிப்படையாக தெரிவித்தவர். சிஏஏ சட்டம் தொடர்பாக தனது எதிர்ப்பை பகிரங்கமாக கூறியதால் நிதீஷின் கோபத்திற்கு ஆளானவர். "ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சிக் கொள்கைகள் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்காக எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்கள் செய்த பணிகளால் நான் ஈர்க்கப்பட்டேன். பீகார் தேர்தல்களைப் பொருத்தவரை அரசியல் என்பது ஒரு படிப்படியான செயல்முறையாகும். பீகார் அரசியலில் எனது நிலைப்பாட்டை நான் அடுத்த சில நாட்களில் தீர்மானிப்பேன், " என்றார். இவரைத்தான் ட்ரம்ப் கார்டாக பயன்படுத்தி பீகாரில் ஆம் ஆத்மிக்கு வலு ஏற்படுத்தி லாலு கட்சியோடு கூட்டணிக்கு முடிச்சுப்போடும் பணியை, பிரசாந்த் கிஷோர் கையில் எடுப்பார் என்கிறார்கள்.
அடுத்தடுத்து பணிகள்
இதில் மமதா பானர்ஜியுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியவர், பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில் ஸ்டாலினுடன் இணைந்து திமுக வெற்றிக்கு உழைக்க ஆயத்தமாகிவிட்டார், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது. கேரளாவில், கம்யூனிஸ்டுகள் பிரசாந்த் கிஷோர் உதவியை நாட வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் வேண்டுமானால் கைக்குள் கொண்டுவர முயலக்கூடும். ஆனால் பீகாரில், வாலின்டயராகவாவது, லாலு பிரசாத் யாதவின், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் கைகோர்ப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மோடியா, கிஷோரா
பாஜக-ஜே.டி.யூ கூட்டணியை ஓட ஓட விரட்டியடிப்பதே தனது லட்சியம் என மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு, லாலு கட்சிதான், துடுப்பாக மாறப்போகிறது. மேற்கு வங்கம், தமிழகத்தில் பாஜக வோ அதன் கூட்டணிகளோ, ஆட்சியை பிடிக்க விடாமல் பார்த்துக்கொள்ளப்போவதிலும் பிரசாந்த் கிஷோர் பெரும் பங்கு வகிக்கப்போகிறார். கேரளத்தில், பாஜக ஆட்சியை பிடிப்பது பற்றி கனவு காண முடியாது என்பதால், கடவுளின் தேசத்தில் மட்டும் பிரசாந்த் கிஷோருக்கு களப்பணி அதிகம் இருக்காது என தெரிகிறது. அடுத்து வரும் தேர்தல்கள் அனைத்தும் மோடி vs பிரசாந்த் கிஷோர் என்பதாகத்தான் மாறப்போகிறது என்பதுதான் மொத்த சம்பவங்களின் ஒற்றை வரி கருத்தாக இருக்க முடியும்.