பஞ்சாப்புக்கு "குட்பை.." பிரசாந்த் கிஷோர் அதிரடி.. பாஜகவுக்கு "ஸ்கெட்ச்.." பரபரக்கும் அரசியல் களம்
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு முதன்மை அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரபல வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி
ஆனால், பிரசாந்த் கிஷோர் எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பின்னால், மிகப் பெரிய தொலைநோக்கு பார்வை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
கடந்த ஒரு தசாப்தமாக இந்திய அரசியலில் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு பெயர் என்றால் அது பிரசாந்த் கிஷோர். 2011ம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐபேக் அரசியல் கட்சிகளுக்கு 9 தேர்தல்களில் ஆலோசனை வழங்கியது. அதில் பிரசாந்த் கிஷோர் எந்த கட்சிக்கு ஆதரவாக இருந்தாரோ அவை 8 தேர்தல்களில் வெற்றி பெற்றன. 2012ஆம் ஆண்டு குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலின்போது பாஜகவுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். நான்காவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பொறுப்புக்கு வந்தார்.
பல கட்சிகளுக்கும் பணி
அவரது பணியால் கவரப்பெற்ற நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு தேசிய அளவில் பாஜகவுக்கு வியூகம் அமைக்கும் பொறுப்பை அவருக்கு வழங்கினார். அந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வர முடிந்தது நரேந்திர மோடியால். பிரசாந்த் கிஷோர் சார்ந்து இருந்த பாஜக இந்த சாதனையை படைத்தது. நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். இருப்பினும் பிரசாந்த் கிஷோருக்கு கட்சி வேறுபாடுகள் எதுவும் கிடையாது. 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில பொதுத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கினார். 2019 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் ஆலோசனைகளை வழங்கினார். இதில் 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற தோல்வியை தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இவர் சார்ந்த கட்சிகள் வெற்றி பெற்றன.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் , காங்கிரஸ் தனது வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரை மலைபோல நம்பியிருந்தது. அதிலும் குறிப்பாக முதலமைச்சர் அமரீந்தர் சிங், பிரசாந்த் கிஷோர் உதவியை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் மேலிடம் பஞ்சாபில் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமனம் செய்தது. இதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒற்றுமையாக நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்றாலும் இருவரிடையேயும் விரிசல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோர் விலகியிருப்பது பஞ்சாப் காங்கிரசுக்கு பின்னடைவாகும். அதேநேரம் பிரசாந்த் கிஷோர் சாதாரணமாக இந்த ராஜினாமா முடிவை எடுக்கவில்லை.
பிரசாந்த் கிஷோர் திட்டம்
பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. பொது வாழ்க்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பிரசாந்த் கிஷோர் பெரிய திட்டத்தோடு களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. ஆனால் பாஜக அதற்கு ஒரு வருடம் முன்பாகவே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசித்து வருகிறது என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இப்போது இருந்தே பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் நினைக்கிறார்.
காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்
இப்போது பஞ்சாப் தேர்தல்களில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தால் தனது பெரிய அளவிலான திட்டம் பலனளிக்காமல் போய்விடும் என்று அவர் யோசிப்பதாக கூறப்படுகிறது. எனவே அனைத்து விஷயங்களில் இருந்து ஒதுங்கி, முழுக்க முழுக்க தனது கவனத்தை லோக்சபா தேர்தலை நோக்கி அவர் திருப்ப உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். எதிர்க் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் திட்டம் பிரசாந்த் கிஷோரிடம் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் உடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் குறித்து சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதற்கு விரும்புவதாக ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.
கவனிக்கும் பாஜக
பிரசாந்த் கிஷோர் கட்சியில் சேர்ந்தால் அவருக்கு எந்த மாதிரி பொறுப்புகளை வழங்கலாம் என்பது பற்றி மூத்த தலைவர்களிடம் ராகுல்காந்தி கருத்து கேட்டிருக்கிறார் . 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிரசாந்த் கிஷோர் வியூகங்களை காங்கிரஸ் விமர்சனம் செய்து இருந்தது. ஆனால் அதெல்லாம் பழைய கதை . இதன் பிறகும் தனது திறமையை பிரசாந்த் கிஷோர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். எனவே இப்போது அவரது சேவை தங்களுக்கு தேவை என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. எனவே அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதை பாஜக தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? தங்களுக்கு அடுத்த தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி எல்லாம் பாஜகவும் தங்களது சர்வே ஏஜென்சிகள் மூலம் அதிக தகவல்களை சேகரித்து வருகிறது.