பருவமழைக்கு முன்பான கோடைமழை 27 சதவீதம் சரிவு.. வெயில் அதிகரிப்பு.. விவசாயம் கவலைக்கிடம்
டெல்லி: நாட்டில் பருவமழைக்கு முன்பு பெய்யும் கோடை மழைப் பொழிவு 27 சதவீதம் சரிந்திருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மழை பொழிவு சரிவால் நாட்டின் சில இடங்களில் விவசாயம் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.
நாட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 24ம் தேதிக்குள் 43.3 மில்லிமீட்டர் மழைதான் பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக இதே காலகட்டத்தில் 59.6 மில்லிமீட்டர் மழை பெய்யும் என்றும் சராசரியாக 27 சதவீதம் அளவுக்கு மழை பொழிவு சரிந்திருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதியில் கைவிட்ட ஃபனி.. தமிழகத்தை வாட்டி எடுக்க போகும் வெயில்.. வானிலை மையம் எச்சரிக்கை!
அதிக பட்ச சரிவு
நாட்டில் அதிகபட்சமாக வடமேற்கு மாநிலங்களான உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தர்காண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களில் 38 சதவீதம் அளவுக்கு மழை பொழிவு குறைந்துள்ளது.
குறைந்த சரிவு
இதேபோல் தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், மகாராஷ்டிராவிலும் 31 சதவீதம் மழை பொழிவு சரிந்துள்ளது.
அதிக மழை
கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 23 சதவீதம் அளவுக்கு மழை பொழிவு குறைந்துள்ளது. அதேநேரம் இந்தியாவின் மத்திய மாநிலங்களில் வழக்கத்தை விட 5 சதவீதம் அதிக அளவு மழை பெய்துள்ளது.
மழைக்கு பலி
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழைக்கு முன்பான மழையின் போது இடிமின்னல் காரணமாக இந்த மாதத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வனத்தில் தீ
வழக்கமாக மார்ச் முதல் மே இறுதிவரை வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்கள் பெய்யும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறையும் ஆனால் பருவமழை சரிவால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. விவசாயமும் நாட்டின் பல இடங்களில் மழையில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி காரணமாக தீப்பிடித்து எரிந்த நிகழ்வுகளும் நடந்தன.