கொரோனா.. மோசமான பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சொல்கிறார்
டெல்லி: மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், இன்று வடகிழக்கு மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோ கான்பரன்சிங் நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, பல வளர்ந்த நாடுகளைப் போல நம் நாட்டில் மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகும் என்று கணிக்கவில்லை, ஆனால் இன்னும் மோசமான சூழ்நிலைக்கு முழு நாட்டையும் தயார் செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டில், 95 பேர் இறந்துள்ளனர், மேலும் 3,320 புதிய கேஸ்கள் பதிவாகிய நிலையில், ஹர்ஷ்வர்த்தனின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவோம்.. ஆரோக்கியமானவர்கள் அதிகரிச்சா.. கொரோனா ஒழியும்.. தமிழக அதிகாரி!
மோசமான சூழ்நிலை கிடையாது
பல வளர்ந்த நாடுகளைப் போல நம் நாட்டில் மிக மோசமான சூழ்நிலை உருவாகும் என்று அரசு கணிக்கவில்லை. அந்த மாதிரியான நிலைமை இந்தியாவில் நடக்கவும் இல்லை. நாட்டில் கோவிட் -19 இன் இறப்பு விகிதம் சுமார் 3.3% ஆக உள்ளது, இது உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும்.
குணமடைவது அதிகரிப்பு
இந்தியாவில் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடையும் மீட்பு விகிதம் 29.9% என்று அதிகரித்துள்ளது. இதெல்லாம் நமக்கு மிகவும் நல்ல அறிகுறிகள். கடந்த மூன்று நாட்களில், கோவிட் -19 இரட்டிப்பு விகிதம் சுமார் 11 நாட்களாக உள்ளது. அதே நேரத்தில், நீங்கள் கடந்த ஏழு நாட்களைப் பற்றி பேசினால், இரட்டிப்பு விகிதம் 9.9 நாட்களாக இருந்தது.
சிகிச்சை வசதிகள்
COVID-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரத்தியேகமாக 843 மருத்துவமனைகள் உள்ளன. அதில் சுமார் 1,65,991 படுக்கைகள் உள்ளன. நாடு முழுவதும், 1, 991 COVID-19 சுகாதார நிலையங்கள் உள்ளன, அவை 1, 35, 643 படுக்கைகளைக் கொண்டுள்ளன. இந்த படுக்கைகளில், தனிமை மற்றும் ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளன.
பரிசோதனை
நாடு முழுவதும் 7, 645 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ளன. இந்தியாவில் 69 லட்சம் N-95 முகக்கவசங்களை பல்வேறு மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளோம். மொத்தம் 32.76 லட்சம் பிபிஇக்கள் (PPE) மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. புனேவில் உள்ள ஒரு சோதனை ஆய்வகத்திலிருந்து சோதனைகளை தொடங்கினோம். இப்போது நாட்டில் 453 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன.
ஆரோக்கியமாக உள்ளார்கள்
நேற்று மாலை பல்வேறு மாநிலங்களிலிருந்து டேட்டாவை பெற்று ஆய்வு செய்தோம், நோயாளிகளில் 0.38 சதவீதம் பேர் மட்டுமே வென்டிலேட்டர்களில் இருப்பதைக் கண்டறிந்தோம். ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் எண்ணிக்கை 1.88 சதவீதமும், ஐ.சி.யூ படுக்கைகளில் உள்ளோர் எண்ணிக்கை 2.21 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இவை அனைத்தும் ஆச்சரியப்படத்தக்க நல்ல விஷயங்கள். இவ்வாறு ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.