பேரறிவாளன் விடுதலையை ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தகவல்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலையை குடியரசுத்தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வது பற்றி குடியரசுத்தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், தம்மை விடுதலை செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர்.
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி மாநில அரசு தமக்குள்ள 161-வது பிரிவு அதிகாரத்தின் கீழ் 7 பேரை விடுதலை செய்ய முடியும். இருந்தபோதும் மத்திய அரசு, அப்படி எல்லாம் அதிகாரம் இல்லை என்கிறது. மத்திய அரசின் இந்த முட்டுக்கட்டை வாதத்துக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி குடியரசுத்தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி யார் முடிவெடுக்க வேண்டும் என்ற சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது. தங்கள் விடுதலையை ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பரோல் விடுமுறை தவறாக பயன்படுத்தவில்லை என்றும் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது ஆளுநர்தான் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.