ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்! அக். 31 முதல் 2 யூனியன் பிரதேசம் உதயம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே, அக்டோபர் 31ம் தேதி முதல் காஷ்மீர், லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக செயல்பட தொடங்கும்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததுடன், அம்மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், ராஜ்யசபாவில், கடந்த 5ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, மறுநாளே, லோக்சபாவில், அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேறியது. முன்னதாக, மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை நியாயப்படுத்தி பேசினார். சுமார் 39 நிமிடங்கள் இந்த உரை நீடித்தது.
ஒரு பக்கம், இந்த சட்டத் திருத்தத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, சூட்டோடு சூடாகா, ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவிற்கு, இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே, சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் அக்டோபர் 31ம் தேதி முதல் 2 யூனியன் பிரதேசங்கள் செயல்பட ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.