இனி காலிப்பணியிடமே இல்லை.. ஹவுஸ்புல்.. உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி
டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.
இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாக சுப்ரீம் கோர்ட் திகழ்கிறது. இந்த நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி அல்லாமல் 31 நீதிபதிகள் இருப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில காலமாக 31 நீதிபதிகளில் 26 அல்லது 27 நீதிபதிகளே இருந்து வந்தனர். நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகள் தேங்கி இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார். நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், அனிருத்த போஸ், போபண்ணா ஆகியோரை ஜனாதிபதி நியமனம் செய்தார்.
பொதுவாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் குழுவே நியமித்து வருகிறது. இதற்கு மாறாத தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு உருவாக்க முடிவு செய்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், ஹிமாச்சல் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சூர்யகாந்த், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்த போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் தற்போது புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்றுக் கொள்வர் என தெரிகிறது.
இவர்களில் அனிருத்த போல் மற்றும் போபண்ணா ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கொலீஜியம் அமைப்பு அவர்களது பெயர்களை மீண்டும் பரிந்துரைத்து அது ஜனாதிபதியால் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.