16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு!
டெல்லி: 16வது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 16வது மக்களவையை குடியரசு தலைவர் கலைத்துள்ளார்.
17வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது. இதற்காக வரும் 30 ஆம் தேதி மீண்டும் நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி.
16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு!
தீர்மானம்
இந்நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் 16வது மக்களவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரிந்துரை
இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரிய மோடி 16வது மக்களவையை கலைக்க பரிந்துரை செய்திருந்தார்.
கலைத்து உத்தரவு
இந்நிலையில் 16வது மக்களவையை குடியரசுத் தலைவர் கலைத்துள்ளார். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 16வது மக்களவையை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
பட்டியல் ஒப்படைப்பு
இதனிடையே மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா குடியரசுத் தலைவரிடம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை வழங்கியுள்ளார்.