இது வரலாற்று பெரும்பான்மை.. பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி புகழாரம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். தனது உரையின் போது 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் நாட்டு மக்கள் தற்போதைய அரசின் பணிகளை மதிப்பீடு செய்ததாகவும் அதன் பிறகே புதிய அரசை வரலாற்று மெஜாரிட்டியுடன் தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 3 நாட்களாக உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களை ஒன்றுகூட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்
அவர் அப்போது கூறுகையில், "மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது. நாட்டு மக்கள் தற்போதைய அரசின் பணிகளை மதிப்பீடு செய்து அதன் பிறகே புதிய அரசை வரலாற்று மெஜாரிட்டியுடன் தேர்வு செய்துள்ளார்கள். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதுதான் அரசின் நோக்கம். நடந்து முடிந்த தேர்தலில் 61 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்து, புதிய சாதனை படைத்துள்ளார்கள்.
நகர்புற வளர்ச்சி
அனைவருக்கும் வளர்ச்சி என்பதோடு, அனைவரது நம்பிக்கையையும் பெறவேண்டும் என்பதே அரசின் நோக்கம். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. நாட்டின் நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி, ஊரகப் பகுதிகளும் சேர்ந்தே வளர்ச்சியடைய வேண்டும். கிராமப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும். வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம்
நம் வருங்கால தலைமுறைக்காக தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். விவசாயிகள் நிம்மதியுடன் வாழ, ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். வேளாண்துறையை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். விவசாயத்துறையில் சவால்களை களைய, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த பிரத்யேக குழு அமைக்கப்படும். ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் அடைய கடந்த 5 ஆண்டுகளாக திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன
ஏழைகளுக்கு உயர்தர சிகிச்சை
கால்நடைத் துறையை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மீன்கள் வளர்ப்பில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
வங்கிகள் அனைவருக்குமானது என்பதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது. உயர்தர மருத்துவ சேவைகளை தற்போது ஏழை எளிய மக்களும் பெற முடிகிறது. சுமார் 26 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை மத்திய அரசின் புதிய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் சுகாதார மையங்கள் நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படும். பழங்குடியினர் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது
3 கோடி கான்கிரீட் வீடுகள்
பெண்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட தேவையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. கிராமப்புற பெண்களின் நலன், பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். பெண் குழந்தைகளை பேணும் மத்திய அரசின் திட்டத்தால் நாட்டில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை படிக்க வைக்கும் மத்திய அரசின் திட்டத்தால் நாட்டில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முறை நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். தொலைதூர கிராமங்களில் சுமார் 3 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்
இளைஞர்களுக்கு அதிகாரம்
இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது இளைஞர்கள் தான் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்கள் தரமான கல்வியை பெற மத்திய அரசு கூடுதல் நிதி உதவி அளிக்கும். வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை இளைஞர்கள் பெற திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். புதிய நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கே உலகத்திற்கே இந்தியா முன் உதாரணமாக விளங்குகிறது. முன்னணி கல்வி நிறுவனங்களின் உயர் கல்வி படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும். கல்வித்துறையில் அடிப்படை கட்டமைப்புகளை நவீனமாக்க முன்னுரிமை அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
உள்நாட்டு உற்பத்தி
மத்திய அரசின் மேன் இன் இந்தியா திட்டம் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 2022க்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக்குவது தான் மிக முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் தொழில் தொடங்குவது, தொழில் செய்வது மிகவும் எளிமையாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் 5வது சிறந்த நாடாக உள்ளது சிறிய தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி உதவிகரமாக அமைந்துள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதில் அரசு தீவிரமாக செயல்படும். கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையும் தொடரும். புதிய இந்தியாவை உருவாக்க நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். 2022ம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்சிறிய நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை தொடங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு உழைத்து வருகிறது. பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்" இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தனது உரையில் குறிப்பிட்டார்.