புதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..!
டெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய வேளாண் மசோதக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடும் முழுவதும் விவசாயிகளும், எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசு நினைத்ததை சாதித்துக்கொண்டது.
விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
நாளை அதிமுக செயற்குழு- பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர்- வரிந்து கட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்!
3 மசோதாக்கள்
விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாய சட்டம், விளைப்பொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்றையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த 3 மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் பெரும் அமளியே நடைபெற்றது. அதில் 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் மனு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகக் கூடும் என்றும் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த 3 மசோதாக்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்க்கட்சிகள் என யாரிடமும் ஆலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக புகார் அளித்தனர்.
அரசிதழில் வெளியீடு
இந்நிலையில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து ஒப்புதல் வழங்கியுள்ளார். இது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விவசாய மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில் ஜனாதிபதி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு நினைத்ததை சாதித்துவிட்டது.
எதிர்க்கட்சிகள் ஏமாற்றம்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை எதிர்ப்பு இருந்தும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்வார் என எதிர்பார்த்த எதிர்க்கட்சிகளுக்கு இது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.