சிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
Recommended Video
டெல்லி: அருண்ஜேட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நிதி அமைச்சரான அருண்ஜேட்லி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில் சிறந்த வழக்கறிஞர், எம்பி, மத்திய அமைச்சராக இருந்தவர் ஜேட்லி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஜேட்லியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சக்தி வாய்ந்த அறிவாளி, நிர்வாகத் திறமை மிக்கவர்.
இதுகுறித்து வெளிநாட்டில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலில் கூறுகையில் ஜேட்லியின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன். அவர் நாட்டிற்கு நீண்ட பங்களிப்பை செலுத்தியவர் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில் அருண் ஜேட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும் என்றார் அமித்ஷா. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜேட்லி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் அருண் ஜேட்லியின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றார். ஜேட்லியின் மறைவு மனவேதனை அளிக்கிறது என்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும் , நிர்வாகத் திறமை கொண்டவராகவும் இருந்தவர் ஜேட்லி என திமுக எம்பி டிஆர் பாலுவும் சிறந்த மாமனிதர், பண்பாளர் நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.