காஷ்மீர்.. டெல்லி பிரஸ் மீட்டில் பழைய பல்லவியை பாடிய ட்ரம்ப்.. பாக் மீடியாக்கள் குஷி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ட்ரம்ப், இன்று இரவு அமெரிக்கா கிளம்ப உள்ளார். முன்னதாக இன்று மாலை சுமார் அரை மணி நேர காலத்திற்கு டெல்லியில் நிருபர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த கேள்விகளும் எழுந்தன. அப்போது, அவர் கூறுகையில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் குறித்து இன்று விரிவாக பேசப்பட்டது. அது ஒரு பிரச்சினை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாகிஸ்தான் இந்த விஷயத்தில் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன். ஏனெனில், எனக்கு, மோடி, இம்ரான் கான் ஆகிய இரு ஜென்டில்மேன்களிடமும் எனக்கு நல்ல உறவு உள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தகராறு இருப்பது எனக்கு தெரியும். நீண்டகாலமாக இரு நாடுகள் நடுவே இது மையப் புள்ளியாக உள்ளது. ஒவ்வொரு விஷயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கும். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் ஏற்கனவே இவ்வாறு குறைந்தது 2 முறையாவது கூறியிருப்பார். இதை மோடி ஏற்கவில்லை. காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அமெரிக்கா தலையிட முடியாது என கூறியிருந்தார். ஆனால், இன்று டெல்லியில் வைத்தும் ட்ரம்ப் அதே பல்லவியை பாடியுள்ளது, கண்டிப்பாக இந்திய தரப்பால் ரசிக்க முடியாது.
US President Donald Trump on CAA: I want to leave that to India and hopefully they will make the right decision for their people. pic.twitter.com/5DqHKJbaCP
— ANI (@ANI) February 25, 2020
பாகிஸ்தான் ஊடகங்களும், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ட்ரம்ப் தயாராக இருப்பதாக கூறிவிட்டதாக பிரேக்கிங் செய்திகளை பறக்கவிட்டுக் கொண்டு இருக்கின்றன.