இப்போவா பிரஸ் மீட் பண்ணுவீங்க.. சரியில்லையே இது.. மோடிக்கு 'அட் அ டைமில்' ராகுல் காந்தி பதிலடி
Recommended Video
டெல்லி: பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்கு நாலைந்து நாட்களே இருக்கும் நிலையில், பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது என்பது மரபு கிடையாது என்று விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று மாலை, டெல்லியில், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் பதவியில் இருந்த இந்த ஐந்து ஆண்டு காலமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்தவர் நரேந்திர மோடி. ஆனால் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மோடி பிரஸ் மீட் செய்தது நாடு முழுக்கவுமே ஆச்சரியமாக பேசப்பட்டது.
5 வருடம் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.. முதல்முறை செய்தியாளர்களை சந்திந்த மோடி.. பரபரப்பு பேட்டி!
ஒரே நேரத்தில்
ஒரு பக்கம் மோடியும் அமித்ஷாவும் பிரஸ் மீட் செய்த அதே நேரத்தில், மற்றொரு பக்கம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். தொலைக்காட்சி சேனல்களில், மோடியின் பேட்டியை ராகுல் கவனித்துக் கொண்டே பேட்டியளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: தேர்தல் நடைமுறைகள் முடிவடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பிரதமர் செய்தியாளர்களை சந்திப்பது மரபு கிடையாது. தனது பதவி காலத்தில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்திக்கிறார். ஆனால் ரபேல் தொடர்பாக என்னுடன் விவாதிக்க தயாரா என்று கேட்ட சவாலுக்கு இது வரை பதில் சொல்லவில்லை, என்று குற்றம் சாட்டினார்.
மக்கள் முடிவு
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்குமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, நான் ஏற்கனவே தெளிவாக இது பற்றி சொல்லி விட்டேன். மே 23ம் தேதி நாட்டு மக்கள் ஒரு முடிவை அறிவிக்க உள்ளார்கள். அந்த முடிவின் அடிப்படையில் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தேர்தல் ஆணையம் சரியில்லை
மேலும் அவர் கூறுகையில், நான் அனுபவசாலிகளை மோடி போல மதிக்காத நபர் கிடையாது. எனக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மூத்தவர்களின் ஆலோசனை இருக்கும். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு என்பது பாரபட்சமானது. தேர்தல் கால அட்டவணையை கூட பிரதமர் மோடிக்கு, உதவி செய்யும் வகையில்தான் அமைக்கப்பட்டது. பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் நிறைய பணம் உள்ளது. ஆனால், எங்களிடம் உண்மையும் நேர்மையும் உள்ளது.
ஓய்ந்தது பிரச்சாரம்
நான் இப்போதெல்லாம் பிரஸ்மீட்டில், சிறப்பாக பேசுகிறேன் என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், நிருபர்களும், கேமராமேன்களும் எனக்கு வழங்கிய ஆலோசனைகள்தான். இதுதான் இந்த நாட்டின் சிறப்பு அம்சம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். இறுதிகட்ட லோக்சபா தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் அந்த தொகுதிகளுக்கு பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. இந்த நிலையில்தான் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.