போர் நினைவு சின்னத்தில் மோடி.. தலைப்பாகையை கவனித்தீர்களா.. பின்னணியில் ஸ்பெஷல் காரணம்!
டெல்லி: நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி போர் நினைவு சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்திய பிறகு அங்கே உள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டார் மோடி.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைவர் மற்றும் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
|
குடியரசு தின அணி வகுப்பு
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவதற்காக நரேந்திர மோடி அங்கு சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் ராணுவ வீரர்கள் தங்களது பராக்கிரமத்தை வெளிப்படுத்தினர். அதேநேரம், குடியரசு தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அணிந்து இருந்த சிவப்பு வண்ணத்திலான தலைப்பாகை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. வழக்கமான தலைப்பாகை அணியாமல்தான் குடியரசு தின விழாவில் மோடி பங்கேற்பு வழக்கம்.
வித்தியாசமான தலைப்பாகை
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது, பொதுவாக அணிவகுப்பு மரியாதையின் போது தலைமை ஏற்கக்கூடிய ராணுவ அதிகாரிகள் அணியக் கூடிய வகையிலான நீளமான தலைப்பாகையை அணிந்து தேசியக் கொடியை ஏற்றி, மோடி, உரை நிகழ்த்தியதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இது புது மாதிரியான தலைப்பாகையாக இருந்தது. இந்த தலைப்பாகைக்கு பின்னணியில் ஒரு கதை உள்ளது.
|
ஜாம்நகர் ராஜ குடும்பம்
மோடி அணிந்திருந்த தலைப்பாகை குஜராத் ஜாம் நகர் ராஜ குடும்பத்தினரால் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதைத்தான் மோடி அணிந்து குடியரசு தின விழாவில் பங்கேற்றார். நாட்டின் உயரிய ஒரு விழாவில், ஜாம்நகர் மன்னர் குடும்பம் வழங்கிய தலைப்பாகையை பயன்படுத்தி அவர்களின் அன்புக்கு மரியாதை செலுத்தியுள்ளார் மோடி என்கிறார்கள். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
மாநில பாரம்பரியங்கள்
மோடி பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காக சென்றால் அந்தந்த மாநிலங்கள் பாரம்பரிய உடை அணிந்து கொள்வது வழக்கம். சீன அதிபருடன் மாமல்லபுரம் வந்தபோது, வேட்டி சட்டை அணிந்து இருந்தார் பிரதமர் மோடி. வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் போது அந்த மாநில கலாச்சாரத்துக்கு ஏற்ப வித்தியாசமான தலைப்பாகைகளை அவர் அணிந்திருப்பதை பார்த்துள்ளோம்.
தலைப்பாகை கலாச்சாரம்
இவ்வாறு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் சேர்ந்த ஆடை அணிவதற்கு மோடி எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜாம்நகர் அரச குடும்பம் கொடுத்த தலைப்பாகையை இன்று அவர் அணிந்து உள்ளார்.