இப்போது நமக்கு தேவை "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட போது உதவிய அனைத்து நாடுகளுக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, தனது உரையில் "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்" கோட்பாட்டின் தேவையையும் வலியுறுத்திப் பேசினார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி,ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்டது ஜி7 கூட்டமைப்பு. இந்த ஜி7 உச்சி மாநாடு பிரிட்டன் நாட்டின் கார்ன்வால் என்ற இடத்தில் கானொலிகாட்சி வழியாக நடைபெறுகிறது.
கொரோனாவுக்கு பிறகு உலகைக் கட்டமைப்பது தொடர்பாக நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி நன்றி
பிரதமர் மோடி நேற்று இரவு ஜி7 உச்சி மாநாட்டில் காணொலி மூலம் தனது உரையை ஆற்றினார். இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட போது உதவிய ஜி7 நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை வேகப்படுத்த உதவும் வகையில் மூலப்பொருட்களின் விநியோக சங்கிலியில் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என்ற பிரதமர் மோடி கூறியதற்குப் பல உலக நாடுகள் ஆதரவு அளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரு பூமி ஒரு ஆரோக்கியம்"
மேலும், பிரதமர் மோடி தனது உரையில் உலகளாவிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி தேவை என்றும் தெரிவித்தார். இதைச் சாத்தியப்படுத்த "ஒரு பூமி ஒரு ஆரோக்கியம்" என்ற அணுகுமுறை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக அரசு, தொழில்துறையினர். பொதுமக்கள் என ஒட்டுமொத்த இந்தியச் சமூகமே போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மோடி வலியுறுத்தல்
கொரோனாவை எதிர்கொண்டதில் இந்தியாவின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பிற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்கால இதுபோன்ற பெருந்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோல கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் அறிவுசார் காப்புரிமை தொடர்பான TRIPS ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவளிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டின் கடைசி நாளிலும் (ஜூன் 13) கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள்
முன்னதாக, TRIPS ஒப்பந்தம் தொடர்பாக மோடியின் கோரிக்கைக்கு ஆஸ்திரேலியா தனது ஆதரவைத் தெரிவித்தது. இந்தியா போன்ற நாடுகளுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கொரோனா தடுப்பூசி அதிகம் உற்பத்தி செய்ய முடியும் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். பிரதமர் மோடி குறிப்பிட்ட "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்" என்பதற்கு உலக நாடுகள் நிச்சயம் ஆதரவளிக்கும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பேசினார்.