ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க.. கிரிகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் சென்றடைந்தார். அங்கு சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேசுகிறார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். ஆனால் அவருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக்கில் இன்று தொடங்குகிறது. நாளை வரை நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகல் 1.30மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தானின் பிஷ்கேஸ் நகருக்கு சென்றடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். ரஷ்யா மற்றும் சீனாவுடன் உறவினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அப்போது பேசப்பட உள்ளது.
இதனிடையே இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். ஆனால் அவருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை என இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kyrgyzstan: Prime Minister Narendra Modi lands at the Bishkek airport. He will attend the Shanghai Cooperation Organisation (SCO) summit in the city later. pic.twitter.com/emRhMI65D2
— ANI (@ANI) June 13, 2019
முன்னதாக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அந்த நாட்டின் ஒப்புதல் கோரப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் ஒப்புதலும் அளித்தது. ஆனால் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாமல் ஈரான் வழியாக செல்லும் என வெளியுறவுத்துறை தெரிவித்து இருந்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே புல்வமா தாக்குதலுக்கு பிறகு பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்ல அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.