ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு.. "வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வருத்தத்தில் இருக்கிறேன்.." மோடி உருக்கம்
டெல்லி: மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
திடீர் காரணத்தால் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவந்தது என்று அவரது மகன் சிராக் பாஸ்வான் கடந்த சனிக்கிழமை ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில்தான், ராம் விலாஸ் பாஸ்வான் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நான் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வருத்தத்தில் இருக்கிறேன். ஒருபோதும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவு ஒரு தனிப்பட்ட இழப்பு. நான் ஒரு நண்பனையும், மதிப்புமிக்க சக ஊழியரையும், ஒவ்வொரு ஏழைகளையும் கவுரவமிக்க வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வத்தையும் கொண்டிருந்த ஒருவரை இழந்துவிட்டேன்.
யார் இந்த ராம்விலாஸ்... அரசியல் பின்னணி... இந்திரா காந்தியை எதிர்த்தவர்!!
ராம் விலாஸ் பாஸ்வான் கடின உழைப்பு மற்றும் உறுதியின் மூலம் அரசியலில் உயர்ந்தார். ஒரு இளம் தலைவராக, அவர் கொடுங்கோன்மை ஆட்சி மற்றும் எமெர்ஜென்சி காலத்தில், நமது ஜனநாயகம் மீதான தாக்குதலை எதிர்த்தார். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார், பல துறைகளில் நீடித்த பங்களிப்புகளை செய்தார்.
பாஸ்வானுடன் இணைந்து பணியாற்றியது, தோளோடு தோள் கொடுத்தது நம்பமுடியாத அனுபவமாகும். அமைச்சரவைக் கூட்டங்களின் போது அவர் நுண்ணறிவுடன் பங்களிப்பு செய்தார். அரசியல் ஞானம் முதல் ஆளுகை வரை அவர் பல துறை புத்திசாலி. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி." இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.