எல்லை மோதலில் காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து நலம் விசாரித்த மோடி.. நாடு நினைவு கொள்ளும் என உரை
டெல்லி: கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.
முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று லடாக் புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு ராணுவ அதிகாரிகளுடன் எல்லையிலுள்ள நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.
பின்னர் அவர், ராணுவ வீரர்கள் மத்தியில் எழுச்சி உரை நிகழ்த்தினார். இதைதொடர்ந்து அப்பகுதியில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சந்தித்தார்.
கல்வான்.. பெயர் எப்படி வந்தது தெரியுமா.. ஆச்சரியமூட்டும் வரலாறு.. தாத்தாவின் பெருமை சொல்லும் பேரன்
மைக்கில் உரை
ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின் போது காயமடைந்த ராணுவ வீரர்கள் லே- மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமூக இடைவெளிவிட்டு அவர்களது படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு இடையே நடந்த படி, கையில் மைக் பிடித்து, நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.
தலைமுறைகள் கடந்தது
அப்போது அவர் பேசுகையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நம்மை விட்டு காரணமில்லாமல் பிரிந்து போகவில்லை. நீங்கள் அனைவரும் எதிரி நாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளீர்கள். உங்களது வீரம், மண்ணில் சிந்திய உங்களது ரத்தமும், நமது நாட்டின் இளைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் பல தலைமுறைகள் கடந்தும் நினைவு கொள்ளத்தக்கது.
உலகமே உற்று பார்க்கிறது
நமது வீரமிக்க ராணுவ வீரர்களை, உலகம் முழுக்க உற்று நோக்குகிறது. சக்திமிக்க ராணுவத்திற்கு எதிராக நீங்கள் காட்டிய வீரத்தை பார்த்து, இந்த உலகமே யார் அந்த வீரர்கள், நாங்கள் பார்க்க வேண்டும், அவர்களை பற்றி அறிய வேண்டும் என்று ஆசை கொள்கிறது. அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சி என்ன? அவர்களின் தியாகம் எப்படிப்பட்டது? என்பது பற்றியெல்லாம் தற்போது உலக நாடுகள் அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன.
தாய்க்கு முதல் மரியாதை
நமது நாடு என்றுமே எதிரிகளுக்கு பணிந்து போனது கிடையாது. இனிமேலும் எந்த ஒரு உலக வல்லரசுக் எதிராகவும் கூட நாம் பணிய போவதும் கிடையாது. உங்களைப் போன்ற வீரர்களை ஈன்ற உங்கள் அன்னையருக்கு எனது முதல் மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் விரைவில் நலம் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.