கவனிச்சீங்களா.. தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை தவிர்த்த மோடி.. பின்னணியில் சீன கோபம்?
டெல்லி: சீனாவுடன் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை தவிர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க வில்லை. கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தோடு மோதும் நிலை உருவாகியுள்ளது.
சுமார் 60 நாட்களுக்குப் பிறகுதான் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்வாங்கி உள்ளன. இதற்கு இடையே 20 இந்திய ராணுவ வீரர்கள் இந்த மோதலில் வீரமரணம் அடைந்தனர்.
தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
பின்வாங்கிய சீனா
ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசியில் சுமார் இரண்டு மணி நேரங்கள் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகுதான் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவம் பின் வாங்கியுள்ளது.
பேச்சுவார்த்தைகள்
அதேநேரம் மேலும் பல எல்லைப்பகுதிகளில் இன்னும் சீன ராணுவம் முகாமிட்டு உள்ளது. இந்த பதட்டத்தை குறைப்பதற்காக வரும் 11ம் தேதி ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையேதான், புத்த மத குரு மற்றும் திபெத் நாட்டின் புகழ் பெற்ற தலைவர்களில் ஒருவரான தலாய் லாமா தனது 85வது பிறந்தநாளை ஜூலை 6 ஆம் தேதியான நேற்று முன்தினம் கொண்டாடினார்.
தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா
சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக 60 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர் தலாய்லாமா. இவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்த காரணத்தால் தான் முதன்முதலில் இந்தியா மீது சீனாவுக்கு தீராத வன்மம் ஏற்பட்டதாக சர்வதேச விவகார துறை வல்லுனர்கள் தெரிவிப்பது வழக்கம். அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள தர்மசாலா பகுதியில் 60 வருடங்களாக தலாய் லாமா வசித்து வருகிறார். கடந்த வருடம் அவர் பிறந்த நாளை கொண்டாடியபோது பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவும், இவ்வாறு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
வாழ்த்தவில்லை மோடி
இந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூட தலாய்லாமாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை .பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையிலும் அமைதி காத்தார் மோடி. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தால் சீனா கோபமடையும் என்ற காரணத்தால் பிரதமர் அமைதி காத்ததாக கூறப்படுகிறது.
சீனா உறவுக்கு முக்கியத்துவம்
எப்போதுமே திபெத்துடனான நமது வெளியுறவுக் கொள்கை என்பது சீனாவுடனான உறவை பொருத்துதான் அமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு தலாய்லாமா, தான் சீனாவால் வெளியேற்றப்பட்ட 60வது ஆண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். டெல்லியில் மகாத்மா காந்தி சமாதி அருகே ஒரு நிகழ்ச்சியும், தியாகராஜ் விளையாட்டு காம்ப்ளக்ஸ் பகுதியில், நன்றி இந்தியா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியும் தலாய் லாமாவால் பங்கேற்கப்பட்டது.
என்ன காரணம்
ஆனால் மூத்த தலைவர்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. சீனாவுடன் நட்பு பாராட்ட வேண்டிய நிலையில் தலாய்லாமா நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்பது சீன தலைவர்களுக்கு கோபத்தை வரவழைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது சீனா எல்லையில் இருந்து மெதுவாக பின்வாங்கும் நிலையில் மீண்டும் சீனாவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தலாய் லாமா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாஜக தலைவர்கள் வாழ்த்து
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.யான மத்திய அமைச்சர் கிரேன் ரிஜுஜு தலாய் லாமாவுக்கு ஒரு வீடியோ வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். லடாக் லெப்டினன்ட் கவர்னரான ஆர்.கே.மாத்தூர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், தலாய் லாமாவை வாழ்த்தினார். பாஜக தலைவர் ராம் மாதவ், தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் ‘மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த குரு, எஜமானர்' என்று கூறினார்.