கொரோனா பிரச்சினைக்கு பிறகு, கிடுகிடுவென உயரும் மோடி செல்வாக்கு.. அடித்து சொல்லும் கருத்து கணிப்புகள்
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு பிரச்சினைக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 7ஆம் தேதி மக்களிடம் அவரது புகழ் என்பது 76 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி நிலவரப்படி, அது 83 சதவீதம் ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது தவிர ஐஏஎன்எஸ்-சி வோட்டர்ஸ் கோவிட்19 டிராக்கர் அமைப்பு நடத்திய ஆய்வில், மோடி தலைமை மீதான நம்பிக்கை மார்ச் 25ஆம் தேதி 76.8 சதவீதம் என்ற அளவுக்கு இருந்ததாகவும், ஏப்ரல் 21ஆம் தேதி அது 93.5% என்ற அளவுக்கு வேகமாக அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதியதாக 528 பேருக்கு கொரோனா- பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது
அதிகரித்த செல்வாக்கு
மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பிரச்சினை இந்தியாவில் ஓரளவுக்கு ஆரம்பித்த நிலையில், மோடியின் செல்வாக்கு என்பது சற்று குறைந்த நிலையில் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு சரிவடைந்து இந்திய பொருளாதாரம், மிகப்பெரிய வங்கி நிர்வாக குளறுபடிகள், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத வன்முறைகள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மாதக்கணக்கில் நடைபெற்ற போராட்டங்கள் போன்றவை இதற்கு காரணமாக இருந்தன.
மோடி அறிவிப்புகள்
ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை ஆரம்பித்த பிறகு, மேலே நாம் குறிப்பிட்ட பிரச்சினைகள் மக்களால் மறக்கப்பட்டு விட்டன என்பதை இந்த ஆய்வு முடிவுகள் தெளிவாக கூறுகின்றன. கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு எதிராக போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை முன்னிறுத்தி உள்ளார். இந்திய அளவிலான முக்கிய அறிவிப்புகளை அவரே வெளியிடுகிறார். இது தவிர, உலக அளவில் நன்மதிப்பு கொண்ட தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். இதற்கு காரணம், ஹைட்ரோ குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி, மற்றும் பல நாடுகளுக்கு மத்திய அரசு செய்து வரக்கூடிய நல்லெண்ண அடிப்படையிலான உதவிகள்.
வருங்காலம் முக்கியம்
அதேநேரம் கொரோனா வைரஸ் பிரச்சினை முடிவடைந்த பிறகு, நரேந்திர மோடியின் செல்வாக்கு எவ்வாறு தக்க வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர், பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது, இதை மோடி எப்படி சமாளித்து அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கப் போகிறார் என்பதை வைத்து அவரது புகழ் என்பது தீர்மானிக்கப்பட உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பொருளாதாரம்
"அரசியல் அமைப்பு மற்றும் அரசு இயந்திரங்களின் முழு ஆதரவைக் கொண்ட தலைவராக, மோடி உள்ளார். எனவே, சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நெருக்கடியை தனது சொந்த அந்தஸ்த்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு வழியாகப் பயன்படுத்துவார், அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஏற்படும், பொருளாதார துயரங்களுக்கும் மோடியே குற்றம்சாட்டப்படும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது" என்கிறார் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் தெற்காசியா திட்டத்தின் இயக்குநர் மிலன் வைஷ்ணவ்.
விமர்சனங்கள் இல்லை
கொரோனா பிரச்சினை, எதிர்க்கட்சிகளை மவுனமாக்கியுள்ளது. எனவே விமர்சனங்கள் இன்றி மோடி மக்கள் செல்வாக்கை அனுபவிக்க முடிகிறது. ஆனால், பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, பிரதமர் கேள்வி கேட்கப்படுவார் என்று பெங்களூரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும், துணைவேந்தருமான சந்தீப் சாஸ்திரி கூறினார்.
அசைக்க முடியாத ஆளுமை
பிரதமர் மோடிக்கு எதிராக கேள்விகளை வைக்கும் முன்பு, கொரோனா வைரஸ் அச்சங்கள் குறைய வேண்டும். அதற்காகத்தான் காத்திருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பிரச்சினை, அரசியல் அணிதிரட்டலை கடினமாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார். "போராட்டங்கள் முடிவுக்கு வரவில்லை. தொடரும்" என்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் இருந்த வழக்கறிஞர் முசாக்கிர் ஜமா கான் கூறினார். எது எப்படியோ, இப்போதுள்ள சூழ்நிலையில், மோடி மக்கள் மனதில் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்துள்ளதை இந்த கருத்துக் கணிப்புகள் புடம் போட்டு காட்டுகின்றன.