நாட்டுக்காக உழைப்பதால் பாஜகவை மக்கள் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.. வெற்றி விழாவில் மோடி உற்சாக பேச்சு
டெல்லி: நாட்டு முன்னேற்றத்திற்கு உழைப்பதால் மக்கள் பாஜகவுக்கு அதிகாரம் தந்து அழகு பார்க்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று இரவு, வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் வருகை தந்து இருந்தனர்.
"ஈரம் வேண்டும்.. இரக்கம் வேண்டும்.. மனிதாபிமானம் இல்லாத மனிதர்" ஸ்டாலினை சரமாரியாக விளாசிய முதல்வர்
மக்களுக்கு நன்றி
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் நரேந்திர மோடி பேசியதாவது: முதல் கட்டமாக நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பாஜகவுக்கு நீங்கள் ஓட்டு அளித்தீர்கள் என்பதற்காக மட்டும் கிடையாது, இந்த கொரானா நோய் பரவல் காலகட்டத்திலும், ஆர்வத்தோடு வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீங்கள் வாக்களித்தீர்கள் என்பதற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொண்டர்கள் அர்ப்பணிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரை நான் வாழ்த்தி வணங்குகிறேன். அவர்களது அர்ப்பணிப்பு பணியின் காரணமாகத்தான் நம்மால் வெற்றிபெற முடிந்தது. இந்த தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் ஜேபி நட்டாவை பாராட்டுகிறேன்.
மறு வாக்குப் பதிவு இல்லை
பீஹாரில் எந்த ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதற்கான தேவை எழவில்லை. ஆனால் ஒரு காலத்தில் வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து வாக்குப் பெட்டிகளை கபளீகரம் செய்து கொண்டு சென்று விடும் சூழ்நிலை பீகாரில் இருந்தது. சிறப்பாக தேடுதல் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் முன்னேற்றம்
யார் ஒருவர் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்கு ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுத்து மக்கள் அழகு பார்ப்பார்கள் என்பதற்கு நேற்றைய தேர்தல் முடிவுகள் ஒரு உதாரணம். பாஜக மட்டும் தான் இப்போது இந்தியா முழுமையாக வியாபித்து இருக்கக் கூடிய கட்சியாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருந்தது. வெறும் இரண்டு அறைகளில் இருந்தபடி கட்சி நடத்தினோம்.
மக்கள் அன்பு
ஒட்டுமொத்த நாடும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது பொழிந்து வரும் அன்பு மழை காரணமாக, நாட்டின் வளர்ச்சியை எங்களது முதன்மை இலக்காக மாறி மேலும் மேலும் உத்வேகத்தோடு பணியாற்றுகிறோம். தேர்தலின் வெற்றி தோல்வி என்பது இரண்டாவது பட்சம். ஆனால் நமது தேர்தல் நடைமுறை ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.